தூய்மை நகரம்...கோட்டை விட்ட தமிழகம்...40வது இடத்தில் கோயம்புத்தூர்!!
சென்னை: நாட்டின் தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் இருந்து எந்த நகரமும் முதல் பத்து இடத்தைப் பிடிக்கவில்லை. 40வது இடத்தை கோயம்புத்தூரும், 42வது இடத்தை மதுரையும் 45வது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன.
மத்திய ஹவுசிங் மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் நாட்டில் தூய்மை நகரங்களின் பட்டியலை ஸ்வச் சுர்வேக்ஷன் 2020 என்ற திட்டத்தின் கீழ் வெளியிட்டு இருந்தது. தூய்மை, சுகாதாரம், மக்கள் தொகை அடிப்படையில் நகரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. இந்தப் பட்டியலில் பத்து லட்சம் பேர் வசிக்கும் மக்கள் தொகை நகரங்கள் பட்டியலின் அடிப்படையில் 40வது இடத்தை கோயம்புத்தூரும், பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வசிக்கும் நகரங்களின் அடிப்படையில் 42வது இடத்தை மதுரையும், 45வது இடத்தை சென்னையும் பிடித்துள்ளன. ஒன்று முதல் பத்து லட்சம் மக்கள் தொகை நகரங்களின் அடிப்படையில் திருச்சி 102வது இடத்தையும் பிடித்துள்ளது.

திருச்சி நகரம் 6000 மதிப்பெண்களுக்கு 3360.47 மதிப்பெண் பெற்றுள்ளது. கோயம்புத்தூர் 2337.12 மதிப்பெண் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் 159வது இடத்தை திருநெல்வேலியும், 173வது இடத்தை சேலமும், திருப்பூர் 223வது இடத்தையும் பிடித்துள்ளன.
நாட்டிலேயே தொடர்ந்து முதல் இடத்தை இந்தூரும், இரண்டாம் இடத்தை சூரத்தும், மூன்றாம் இடத்தை நவி மும்பையும், நான்காம் இடத்தை டெல்லியும் பிடித்துள்ளன.
பிரதமர் மோடியால் ஸ்வச் சர்வேக்ஷன் திட்டம் 2016ல் துவக்கி வைக்கப்பட்டது. அந்த ஆண்டு தூய்மையான நகரமாக மைசூர் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இந்தூர் முதலிடத்தில் இருந்து வருகிறது. நடப்பாண்டிலும் முதலிடம் பிடித்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஆய்வு ஸ்வச் சர்வேக்ஷன்தான். இதில் 4242 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் 1.9 கோடி பேரிடம் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications