நல்ல முகூர்த்த நாளில் தான் உதயநிதி பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கும்.. சேலஞ்ச் பண்ணி சொன்ன தமிழிசை
சென்னை: இன்று உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் பரவியது. ஆனால் எனக்கு நல்லா தெரியும். நிச்சயமாக இன்று உதயநிதி பதவியேற்க மாட்டார் என்று நான் கூறினேன். ஏனென்றால் இன்று நல்ல நாள் இல்லை. திமுகவினர் பகுத்தறிவாளிகள் என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் நல்ல நாள் பார்த்து தான் பதவியேற்பார்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திடீரென்று ஒரு வதந்தி பரவியது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்று விடுவார். முதல்வர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்திற்கு வந்துவிட்டார். எல்லா அமைச்சர்களும் வந்துவிட்டார்கள். இன்றைக்கு உதயநிதி துணை முதல்வர் ஆகிவிடுவார் என்று செய்திகள், தகவல்கள் எல்லாம் வந்தது. வட இந்திய பத்திரிக்கைகளில் கூட இந்த தகவல் வந்தது. ஆனால் எனக்கு நல்லா தெரியும். நிச்சயமாக இன்று உதயநிதி பதவியேற்க மாட்டார் என்று நான் கூறினேன்.

இன்று நல்ல நாள் இல்லை. அதனால் உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கமாட்டார் என்று கூறினேன். நாள் நல்லநாள் இல்லை. அதனால் அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். பகுத்தறிவாளிகள். இப்போதும் கூட நான் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.. உதயநிதி ஸ்டாலின் ஒருவேளை துணை முதல்வராக பதவி ஏற்கிறார் என்றால் அந்த நாள் முகூர்த்த நாளாக தான் இருக்கும். நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள் உதயநிதி ஸ்டாலின் முகூர்த்த நாளில் தான் பதவியேற்பார்.
மக்களை அப்பட்டமாக ஏமாற்றுகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் விட கவலைப்பட வேண்டியது துரைமுருகன் தான். துரைமுருகன் வாயிலேயே உதயநிதியை துணை முதல்வர் என்று சொல்ல வைத்து விட்டார்கள். பழனி மாணிக்கத்திற்கு விருதை கொடுத்து விருது வாங்குவது போல உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வாங்கிவிட்டாங்க. பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்படவில்லை. உதயநிதிக்கு முடிசூட்டுவதற்கு ஒரு ஆரம்ப விழா.
திமுகவினர் சிந்திக்க வேண்டும். ஸ்டாலின் சொல்கிறார் 25 வது ஆண்டு கொண்டாடும்போதும் நாம் ஆட்சியில் இருந்தோம். 50 வது ஆண்டு கொண்டாடும் போதும் ஆட்சியில் இருந்தோம். 75 வது ஆண்டு கொண்டாடும் போதும் ஆட்சியில் இருக்கிறோம். 100 ஆம் ஆண்டு கொண்டாடும் போதும் ஆட்சியில் இருப்போம் என்று சொல்கிறார். 25வது ஆண்டிலும், 50 வது ஆண்டிலும் கலைஞர், 75வது ஆண்டில் ஸ்டாலின், 100வது ஆண்டில் உதயநிதி, 125வது ஆண்டில் உதயநிதியின் மகன். பாவம் திமுகவின் தொண்டர்கள். தொண்டர்கள் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். கலைஞர் குடும்பம் பிழைத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றப்படலாம் என்ற பேச்சு கடந்த சில வாரங்களாக அடிக்கடி அடிபட்டு வருகிறது. குறிப்பாக திமுக இளைஞர் அணி செயலாளராகவும் தமிழக இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் வலுத்துள்ளது. முன்னதாக இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது ஆனால், பழுக்கவில்லை' என்றார்.
அதேபோல அமெரிக்க பயணத்திற்கு முன்பாக அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் ஒன்றுதான் மாறாதது வெயிட் அண்ட் சீ என்று பதிலளித்தார். தற்போது, முதல்வர் வெளிநாடு பயணம் முடிந்து வந்துள்ள நிலையில், விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக நேற்று இது தொடர்பான அறிவிப்பு வெளியாக கூடும் என திமுகவினர் மத்தியில் தகவல் பரவியது. இதனால் அண்ணா அறிவாலயத்திலும் தொண்டர்கள் குவிந்தனர். ஆனால், இதுபற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications