விழிபிதுங்கும் ஸ்விக்கி வாடிக்கையாளர்கள்.. தலையில் இடியை இறக்கிய நிறுவனம்.. நடந்தது என்ன?
சென்னை: ஆன்லைன் உணவு நிறுவனமான ஸ்விக்கி ப்ளாட்பார்ம் கட்டணத்தை நிர்ணயித்துள்ளதால் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
டபராக்கள், டிபன் கேரியர்களில் பார்சல் வாங்கி வந்து சாப்பிட்ட காலம் போய், குடும்பம் குடும்பமாக ஹோட்டலுக்கு சென்று உணவு உட்கொண்ட காலம் போய், அலுமினியம் ஃபாயில், பிளாஸ்டிக் பெட்டிகளில் பார்சல் வாங்கி வந்த காலம் போய் தற்போது வீட்டில் உட்கார்ந்து கொண்டே விதவிதமான உணவு பொருட்களை வெவ்வேறு ஹோட்டல்களில் ஆர்டர் செய்து உண்டு மகிழ்கிறோம்.

ஐஸ்கிரீம் முதல் ஐயிரை மீன் குழம்பு வரை, சாக்லேட் முதல் சாணட்விச் வரை எதையும் ஆர்டர் செய்யலாம். இதற்காக ஸ்விக்கி, ஜொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட உணவு டெலிவரி ஆப்கள் உள்ளன. இவற்றை ஆன்ட்ராய்டு போன்களில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
பிறகு இந்த ஆப்களில் ஏதேனும் ஒன்றை ஓபன் செய்து அதில் ஹோட்டல்களின் பட்டியலை பார்த்து எந்த உணவு வேண்டுமோ அதை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு உணவு கட்டணம், சேவை வரி, ரெஸ்டாரன்ட் கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகிறது. இதில் எப்போதுதாவது ஆஃபர்களும் இருக்கும். அதை கிளிக் செய்து 50 முதல் 150 ரூபாய் வரை சேமிக்கலாம்.
இந்த உணவு டெலிவரி செயலிகள் மூலம் உணவுகளை ஆர்டர் செய்தால் குறைந்தபட்சம் அரை மணி நேரத்தில் சுடச்சுட உணவு வீடு தேடி வரும். இந்த உணவை டெலிவரி கொடுக்க இரு சக்கரவாகனங்களை வைத்திருக்கும் இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் ஜிபிஎஸ் வசதி கொண்ட போன் இருக்கும். நாம் குறிப்பிட்ட முகவரியை அந்த போனில் உள்ள மேப்பை பார்த்து வீட்டுக்கு டெலிவரி செய்வர்.

இந்த உணவு ஆர்டர் செய்யும் நிறுவனங்கள் நாடு முழுவதும் இந்த சேவையை செய்து வருகிறது. இதில் ஹோட்டலில் ஒரு உணவை தேர்வு செய்தால் ஆகும் கட்டணத்தை விட 50 முதல் 150 ரூபாய் வரை விலை அதிகமாகவே விற்கப்படும். அது இல்லாமல் டெலிவரி சார்ஜ், ரெஸ்டாரன்ட் சார்ஜ், வரி என கூடுதலாக 200 முதல் ரூ 250 வரை ஆகும்.
இதனால் நேரிடையாகவே உணவை வாங்கிக் கொள்ளலாம் என்றாலும் கூட போவதற்கு சோம்பேறித்தனமாக இருப்பதால் ஆர்டர் செய்தே பலர் உண்கிறார்கள். ஏற்கெனவே கூடுதல் கட்டண சுமையால் அவதியுறும் உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் தனது வாடிக்கையாளர்கள் இன உணவு ஆர்டர் செய்ய ஒரு ஆர்டருக்கு ரூ 2 பிளாட்பார்ம் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. முதற்கட்டமாக ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இது விரிவாக்கப்படலாம் என தெரிகிறது. இதே போன்று கட்டணத்தை மற்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் விதிக்க வாய்ப்புள்ளது. இதனால் உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications