“தோனியை கைது பண்ணுங்க..” சி.எம் செல்லுக்கு புகார் தட்டிய முத்து ரமேஷ்.. என்ன விவகாரம் இது?
சென்னை : ஆன்லைன் சூதாட்டங்களுக்கு விளம்பரங்கள் செய்து பல தற்கொலைகளுக்கு காரணமாக இருக்கும் கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ஷாருக்கான், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பியுள்ளது.
மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் முத்து ரமேஷ் சிஎம் செல்லுக்கு புகார் அனுப்பியுள்ளார். ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அதிரடியாக களமிறங்கி இருக்கும் அவரிடம் பேசினோம்.

ஆன்லைன் ரம்மி
அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்து ரமேஷ் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள புகாரில், ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, கடனாளியாகி பலரும் தற்கொலை செய்து பலியாகி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தையும், வாழ்க்கையையும் இழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. லாட்டரி, குதிரை ரேஸ் போன்ற சூதாட்டங்களை தடை செய்தது போல் ஆன்லைன் ரம்மி, ஐபிஎல் சூதாட்டங்களை தடுத்து நிறுத்த போர்க்கால அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும். ஆன்லைன் ரம்மி விளையாடுங்கள் வீடு வாங்குங்கள் பணம் சேருங்கள் என பொய் பிரச்சாரம் செய்து வரும் கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர்கள் ஷாருக்கான், பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் மீது தமிழக மக்களை கொலை, கொள்ளை, தற்கொலைக்கு தூண்டியதாக கருதி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த முத்து ரமேஷ்
அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் தலைவரான ஜெ.முத்து ரமேஷ் சென்னையில் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். நாடார் சமூக அமைப்புகளோடு இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அனைத்து சமூக மக்களின் பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காகவே சாதி பெயர் இல்லாமல் வைகுண்டர் பெயரில் கட்சி தொடங்கியதாகச் சொல்கிறார். இனி, முத்து ரமேஷிடம் பேசியதில் இருந்து..

அரசியல் கட்சியா?
"அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியைத் தொடங்கி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. கட்சியின் சார்பில் பல்வேறு நலத் திட்டப் பணிகளைச் செய்து வருகிறோம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் கட்சியின் கொள்கை. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமானோருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்துவிடும். அதன்பிறகு வரும் தேர்தல்களில் நிச்சயம் களமிறங்குவோம்."

தோனி மீது புகார்
"ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் தோனி மீது புகார் கொடுத்ததற்கு காரணம், அவர்கள் பிரபலமானவர்கள் என்பதால் விரைவில் கவனம் கிடைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான். தமிழக மக்களின் பொதுவான பிரச்சனைகள் பலவற்றிற்காகவும் போராடி வருகிறோம். தாமிரபரணி ஆற்றில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தண்ணீர் எடுக்கக்கூடாது என போராட்டம் நடத்தினோம். கூடுதல் ரயில்கள் விட வேண்டும் என பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். குறிப்பாக, தென் தமிழகத்தில் அதிக போராட்டங்களை நடத்தி இருக்கிறோம்."

முதல் முறை அல்ல
"மஞ்சப்பை விழிப்புணர்வு, பனைமரங்கள் நடும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். மக்கள் பிரச்சனைகளுக்காக நாங்கள் போராடுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு தமிழன்னையை தலைவிரி கோலத்தில், கருப்பாக காட்டி 'தமிழணங்கு' ஓவியத்தைப் பகிர்ந்து தமிழர்களின் மனதை புண்படுத்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தோம்."

காமராஜர் படம்
"சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான முனையத்திற்கு காமராஜர் பெயர் பலகையை வைக்க வேண்டும், விமான நிலைய வளாகத்தில் காமராஜர் உருவ சிலையைச் நிறுவ வேண்டும், சீரமைப்பு பணிகளுக்காக அகற்றப்பட்ட படங்களை வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உள்நாட்டு விமான நிலைய அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினோம். எங்கள் போராட்டத்திற்குப் பிறகு காமராஜர் உருவப்படம் மீண்டும் அங்கு வைக்கப்பட்டது."

கமலை கைது செய்ய வேண்டும்
"2019ஆம் ஆண்டு இந்து தீவிரவாதி என பேசிய நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என போலீசில் புகார் கொடுத்தோம். அந்த விவகாரம் அப்போது அதிகமாக பேசப்பட்டது. மக்கள் மத்தியில் பரவலாக அறிமுகம் ஆகியிருக்கிறோம். தேர்தலில் களமிறங்கும்போது மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்."

விராட் கோலி, அனுஷ்கா மீது புகார்
"ஆன்லைன் ரம்மியால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் எனக் கோரி புகார் கொடுத்துள்ளோம். எம்.பி.எல் விளம்பரங்களில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். அதன்பிறகு அந்த விளம்பரங்கள் வரவில்லை" என முத்து ரமேஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications