உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமே.. ஏன் ஹிந்தி? மத்திய அமைச்சரிடம் சீறிய கனிமொழி.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!
சென்னை: நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத்தில் இப்போதெல்லாம் தமிழ்நாடு எம்பிக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் பதில் அளித்து வருவது வழக்கமாகி உள்ளது.நாடாளுமன்ற அவை விதிப்படி ஒரு மொழியில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு வேறு மொழியில் பதில் அளிக்க கூடாது என்ற கட்டுப்பாடு இல்லை.
ஆனால் மத்திய அமைச்சர்கள் பொதுவாக துறை சார்ந்த தென்னிந்திய எம்பிக்களின் கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதில் அளித்து வந்தனர். கேள்வி கேட்கும் எம்பிக்கு இந்தி தெரியாத பட்சத்தில் அமைச்சர்கள் மரியாதை கருதி ஆங்கிலத்தில் பதில் தருவது வழக்கமாக இருந்து வந்தது.

சிந்தியா ஹிந்தி
ஆனால் சமீபத்தில் அமைச்சர்கள் பலர் எம்பிக்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்க மறுத்து வருகின்றனர். கடந்த மாதம் ராஜ்ய சபாவில் தமிழ்நாடு எம்பிக்கள் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் சிந்தியா ஹிந்தியில் சரளமாக பதில் அளித்தார். அவர் ஹிந்தியில் பேசியது தமிழ்நாடு எம்பிக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் லோக்சபாவில் தமிழ்நாடு எம்பி ஏ கணேஷ மூர்த்தி தமிழ்நாட்டிற்கான அந்நிய முதலீடு குறித்து தமிழில் கேள்வி எழுப்பினார்.

பியூஸ் கோயல்
துணை கேள்வி பிரிவில் தமிழ்நாட்டிற்கு வர கூடிய அந்நிய முதலீடு குறித்து விளங்கும்படி அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கேள்வி எழுப்பினார். இதையடுத்து பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஹிந்தியில் பேசினார். அதோடு எம்பி ஏ கணேஷ மூர்த்தி தமிழில் பேசிய விஷயங்களில் சில மொழிபெயர்ப்பு முறையாக செய்யப்படவில்லை. இதையடுத்து அமைச்சரை ஆங்கிலத்தில் பேசும்படி அவர் கூறினார். ஆனால் அமைச்சர் பியூஸ் கோயல், அவையில் மொழிபெயர்ப்பு வசதி இருக்கிறது.

ஹிந்தி எதிர்ப்பு
எனவே ஆங்கிலத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் நான் ஹிந்தியில்தான் பதில் அளிப்பேன் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் இன்றும் அவையில் ஹிந்தி பிரச்சனை எழுந்தது. இன்று லோக் சபாவில் திமுக எம்பி கனிமொழி நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை தொடர்பாக கேள்வி எழுப்பினார். ரேஷன் என்பது மாநில சார்ந்த விவகாரம்.

பதில் தர முடியும்
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருள் தருகிறோம். இந்த நிலையில் ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு எப்படி பொருள் வழங்குவது. அதற்கான நிதியை யார் வழங்குவது என்று கேட்டார். இதையடுத்து அமைச்சர் பியூஸ் கோயல் இந்தியில் பதில் அளிக்க தொடங்கினார். அவரை தடுத்த கனிமொழி..நான் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினேன். நீங்கள் ஹிந்தியில் பேசுகிறீர்கள்.

கனிமொழி
உங்களுக்குத்தான் ஆங்கிலம் நன்றாக தெரியுமே.. அதிலேயே பேசலாமே. எல்லோருக்கும் புரியுமே. நீங்கள் ஹிந்தியில் கேட்டால்.. கேள்வி கேட்ட எனக்கு எப்படி புரியும்? என்று கனிமொழி கேட்டார். கடந்த முறை இதே போன்ற விவகாரத்தில் ஆங்கிலத்தில் பதில் அளிக்க பியூஸ் கோயல் மறுத்தார். ஆனால் இந்த முறை.. சகோதரி கனிமொழியை நான் மிகவும் மதிக்கிறேன்.. ஆங்கிலத்திலேயே பதில் அளிக்கிறேன் என்று கூறினார்.
Recommended Video

ட்விஸ்ட்
கடந்த முறை அவையில் மொழிபெயர்ப்பு வசதி இருக்கிறது. எனவே ஆங்கிலத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் நான் ஹிந்தியில்தான் பதில் அளிப்பேன் என்று பியூஷ் கோயல் குறிப்பிட்டார். ஆனால் இந்த முறை இறங்கி வந்து ஆங்கிலத்தில் பதில் அளித்தார், அதில், ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளுக்கும் 100 சதவீதம் மத்திய அரசே நிதி தரும் என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications