நியாயமே இல்லை.. தெற்கு ரயில்வேக்கு எதிராக கொந்தளிக்கும் தாம்பரம், செங்கல்பட்டு மின்சார ரயில் பயணிகள்
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமையான நேற்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ரயில் பராமரிப்புகளை இரவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதுவும் பொதுமக்களை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பராமரிப்பு என்ற பெயரில் வார இறுதிகளில் மின்சார ரயில்களை நிறுத்தக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் முன்பெல்லாம் மின்சார ரயில்கள் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்படும் என்றாலும் ஒட்டுமொத்தமாக பல மணி நேரம் மின்சார ரயில்கள் நிறுத்தப்படாது. அதேபோல் வார இறுதி நாட்கள் பாரமரிப்பு என்ற பெயரில் ரயில் சேவைகள் நிறுத்தப்படாது. இதேபோல் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படாது..

ஆனால் இப்போது அப்படி இல்லை, அடிக்கடி பராமரிப்பு என்ற பெயரில், சென்னை மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுகிறது. ஞாயிறுகள் எல்லாமே சென்னை புறநகர்வாசிகளுக்கு மின்சார ரயில் சேவை இல்லாத ஞாயிறுகளாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் தொலைதூரங்களில் இருந்து ரயிலில் ஊருக்கு போகலாம் என்று வருபவர்கள், மின்சார ரயில் சேவைகள் இயங்காததால் அவதிப்படுகிறார்கள்.
நேற்று பணிமனையில் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரையில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் செங்கல்பட்டு சென்னை கடற்கரை இடையே பயணிகள் கடும் அவதி அடைந்தனர். எனினும் பயணிகள் வசதிக்காக கடற்கரை - பல்லாவரம், கடற்கரை- செங்கல்பட்டு, செங்கல்பட்டு - கடற்கரை இடையே ஒரு மணிநேர இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து கடற்கரை இடையே இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் எங்குமே செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாகினர். நேற்று ஓணம் பண்டிகை மட்டுமின்றி, முகூர்த்த நாள் என்பதால், ரயில் நிலையங்கள் எல்லாவற்றிலும் வழக்கம் போல பயணிகள் வந்தனர். ஆனால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரு மணி நேர இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை அறிந்து ஏமாற்றத்தை சந்தித்தனர்.
கடற்கரை - பல்லாவரம் இடையே ஒரு மணி நேர இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கடுமையாக அலைமோதியது. சில பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் ஒருமுறை என்பதை அறிந்து, காத்திருக்க முடியாமல் அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு படையெடுத்தனர். பூங்கா, எழும்பூர், மாம்பலம் மற்றும் பல்லாவரம் ரயில் நிலையங்களில் வழக்கமான ஞாயிறு போல் நேற்று பயணிகள் கூட்டம் இல்லை. மிக மிக அதிகமாக பயணிகள் கூட்டம் இருந்தது. ஏனெனில் பட்டினப்பாக்கம், காசிமேடு கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதால் கூட்டம் கூட்டமாக பயணிகள் வந்து நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்து வந்தார்கள்.
இதுபோன்ற முக்கியமான நாட்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும், பராமரிப்பு பணிகளை இரவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்தனர். வாரத்தில் ஒரு நாள் தான் வெளியே செல்கிறார்கள் மக்கள், அன்று மின்சார ரயில்கள் இயங்காது என்பது சென்னைபுறநகர் பகுதி மக்களுக்கு பெரிய துயரத்தை தருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து, இனிமேல் ரயில்களை எந்த காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுஒருபுறம் எனில், மின்சார ரயில் ரத்தால் தாம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்களில் எப்படியாவது ஏறி இடம் போட வேண்டும் என்று மக்கள் முண்டியடித்து ஏறியபடி இருந்தனர். மாநகர போக்குவரத்துக்கழகம் மூலமாக 150-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும், மக்களின் தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. இதனிடையே நேற்று இரவு 7 மணிக்கு பிறகு கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications