பல்லாவரம் டூ தாம்பரம்.. பிரபல கட்டுமான நிறுவனம் செய்த வேலை.. ஆடிப்போன கலெக்டர்.. போலீசில் புகார்
சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் கமிஷனராக இருந்தவர் அழகு மீனா. இவரது கையெழுத்தை போலியாக போட்டு அடுக்குமாடி கட்டிடத்துக்கு தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளது தனியார் அடுக்குமாடி கட்டிடம் நிறுவனம். இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட அழகு மீனா ஐஏஏஸ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை தாம்பரத்தை ஒட்டியுள்ள சேலையூர், வண்டலூர், தென் அகரம், மேடவாக்கம், மாடம்பாக்கம், ராவுத்தூர், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் வந்த பின்னர் நிலத்தின் மதிப்பு, முன்பை விட அதிகரித்துள்ளது. பெருங்களத்தூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் வந்துள்ளால், ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோர், அந்த பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை அதிகம் விரும்புகிறார்கள். இதனால் தாம்பரம் பகுதியில் அடுக்குமாடிகளின் எண்ணிக்கை முன்பை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சி கமிஷனராக இருந்த அழகு மீனா ஐஏஎஸ், கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராக பதவி உயர்வு பெற்று சென்று விட்டார். இந்த நிலையில் அழகு மீனா ஐஏஏஸ் , கடந்த வாரம் தாம்பரம் அடுத்த சேலையூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் கலெக்டர் அழகு மீனா கூறுகையில், சென்னை பல்லாவரத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், சேலையூர் பகுதியில் புதிதாக கட்டியுள்ள அடுக்குமாடி கட்டிடத்துக்கு எனது கையெழுத்தை போலியாக போட்டு தடையில்லா சான்றிதழ் தயாரித்துள்ளது. மேலும் அந்த தடையில்லா சான்றிதழை பயன்படுத்தி மின் இணைப்பு பெற்றுள்ளது. எனவே அந்த கட்டுமான நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
எப்படி உண்மை அம்பலமானது: சேலையூரில் புதிதாக கட்டியுள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்இணைப்பு வழங்குவதற்காக அதன் அருகே வசிக்கும் கோபால் என்பவரது வீட்டின் அருகே டிரான்ஸ்பார்மர் பொருத்தி உள்ளார்கள். சந்தேகம் அடைந்த கோபால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அந்த கட்டிடத்துக்கு எவ்வாறு மின்சாரம் வழங்கப்பட்டது? என சேலையூர் மின்வாரிய அலுவலகத்தில் கேட்டுள்ளார்.
அதற்கு அதிகாரிகள், தாம்பரம் மாநகராட்சி சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் மின் இணைப்பு வழங்கியதாக கூறியுள்ளனர். இதையடுத்தே தனது கையெழுத்தை போலியாக போட்டு பல்லாவரத்தைச் சேர்ந்த தனியார் அடுக்குமாடி கட்டுமான நிறுவனம் தடையில்லா சான்றிதழ் தயாரித்து இருப்பது அழகு மீனா ஐஏஎஸ் கவனத்திற்கு தெரியவந்தது. அதன் பின்னர் தான் அவர் சேலையூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். கலெக்டரின் கையெழுத்தை போலியாக போட்டு, அடுக்குமாடி நிறுவனம் தடையில்லா சான்றிதழ் பெற்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications