ரூ 4 கோடி பணம் பறிமுதல்! நயினார் நாகேந்திரன் ஏப்ரல் 22 ல் ஆஜராக தாம்பரம் போலீஸ் சம்மன்
சென்னை: ரூ 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஏப்ரல் 22 ஆம் தேதி ஆஜராகுமாறு தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த 6-ஆம் தேதி இரவு சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த ரயிலில் 3 பேர் 3.99 கோடி ரூபாயை உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என தெரியவந்தது. அவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
இந்த ரூ4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் பாஜக தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்த்தனன் என்பவருக்கு தாம்பரம் மாநகர காவல் துறை சம்மன் அனுப்பியது. சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள கோவர்த்தனுக்கு சொந்தமான உணவகத்தில் இருந்து ரூ 4 கோடி பணம் கைமாற்றப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் ரூ 4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப போலீஸார் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என நயினார் நாகேந்திரன் நேற்றைய தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நயினார் வீட்டில் இல்லாததால் அவருடைய உறவினரிடம் அந்த சம்மன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications