சென்னையில் மசூதி “டூர்”.. சுற்றிப்பார்த்து நெகிழ்ந்த சினிமா இயக்குநர்கள்! ரமலானில் மதநல்லிணக்கம்
சென்னை: எழும்பூரில் உள்ள மலபார் முஸ்லிம் அசோசியேசன் மசூதியில் நடைபெற்ற பள்ளிவாசல் சுற்றுலா நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, அறம் திரைப்படத்தை இயக்கிய கோபி நயினார், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், நடிகர் கண்ணா ரவி, எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமூக நல்லிணக்க முன்னணி என்ற அமைப்பு சார்பில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளமான மசூதிக்குள் அனைத்து மதத்தினரும் சென்று பார்க்கும் வகையிலும், அதன் மூலம் சமூக ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும், பள்ளிவாசல் உங்களை வரவேற்கிறது என்ற பெயரில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிவாசல் டூர்: அந்த வகையில், எழும்பூரில் அமைந்து இருக்கும் மலபார் முஸ்லிம் அசோசியேஷன் MMA பள்ளிவாசலில் பள்ளிவாசல் உங்களை வரவேற்கிறது என்கிற சமூக நல்லிணக்க இஃப்தார் ஒன்று கூடல் நிகழ்ச்சி பள்ளிவாசல் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.

ஐக்கிய நல கூட்டமைப்பின் பொது மேலாளர் ஹாஜி முகம்மது பாரூக் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலபார் முஸ்லிம் அசோசியேஷன் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா மௌலவி ஜாபர், "பள்ளிவாசல்களில் எப்படி பிரார்த்திக்கிறார்கள்? பள்ளிவாசல்களில் என்ன இருக்கிறது? பள்ளிவாசல்களை கொண்டு சமூகம் பெரும் பயன் என்ன இஸ்லாம் குறித்தும், சமூகத்தில் பள்ளிவாசல்களின் முக்கியத்துவம் குறித்தும், வெறுப்பு அரசியலுக்கு எதிரான நல்லிணக்கம் தொடர வேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.

பல்வேறு துறையினர்: சமூக நல்லிணக்க முன்னணியின் நோக்கம் மற்றும் பணிகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நா.தெ.சிவகுமாரன் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு அரசின் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் பொருளாதார அறிஞரும் பேராசிரியருமான ஜெயரஞ்ஜன், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் மண்புழு விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், எத்திராஜ் கல்லூரியின் சேர்மன் திரு முரளிதரன், அக்னி கல்லூரியின் முதல்வர் ஆலுவேந்தர் ஸ்ரீனிவாசன், ஆஷிக் டெல்லி பல்கலைக்கழகம் எழுத்தாளர் பிரேம், கல்வியாளர் பாஸ்கர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பிரபாகரன் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இயக்குநர்கள், நடிகர்கள்: அதேபோல், திரைப்பட இயக்குனரும் மாமனிதன் போன்ற சமூக நல்லிணக்க திரைப்படங்களை இயக்கி வரும் சீனு ராமசாமி, அறம் திரைப்படத்தின் இயக்குனர் கோபி நயினார், மலக்குழி படுகொலைகளை காட்சிப்படுத்திய விட்னஸ் திரைப்பட இயக்குனர் தீபக், அனல் மேல் பணி துளி இயக்குனர் தோழர் கைசர் ஆனந்த், எட்டுத்திக்கும் பற, மெர்லின், இரும்பன் திரைப்பட இயக்குனர் கீரா, கதிர் திரைப்பட இயக்குனர் தினேஷ் பழனிவேல், ரத்த சாட்சி திரைப்படத்தின் நடிகர் கண்ணா ரவி, இன்ஷா அல்லாஹ் திரைப்பட இயக்குனர் உலக சினிமா பாஸ்கரன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

வரலாற்று ஆய்வாளர் கோம்பை அன்வர், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியாவின் மாநில தலைவர் தோழர் கே.எஸ்.அப்துர் ரஹ்மான், சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகமது கவுஸ் உள்ளிட்ட பல்வேறு சமுதாயங்களை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். அவருகளுக்கு பள்ளிவாசலின் உட் கட்டமைப்பு, முஸ்லிம்கள் தொழுகை நடத்து முறை ஆகியவை விளக்கப்பட்டது. நோன்பு திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் நேரடியாக பங்கேற்றனர். வரும் 11 ஆம் தேதி போரூர் முகலிவாக்கம் மஸ்ஜித் அர்ரஹ்மான் பள்ளிவாசலில் இதேபோன்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு உள்ளன.













Click it and Unblock the Notifications