தமிழ்த் தேசியம் Vs திராவிடம்: விஜய் சரி; சீமான் பாசிசம்: திருப்பி அடித்த தியாகு
சென்னை: சீமான் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் என்பது பிறமொழி பேசுவர்களை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற நினைக்கிறது என்றும் அது ஒரு பாசிச போக்கு என்றும் தியாகு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தங்கள் கட்சியின் கொள்கையைக் கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் அறிவித்தார். அப்போது கட்சிக் கொடியில் உள்ள மஞ்சள் நிறத்திற்கும் சிவப்புக்கும் விளக்கம் அளித்தார். கொள்கையளவில் திராவிடத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இரண்டு கண்களாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இங்குதான் பிரச்சினை தொடங்கியது. நவம்பர் 1 ஆம் தேதி மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை கொண்டாடிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றா? இல்லவே இல்லை’ என்று விளக்கம் அளித்துப் பேசிய அவர், 'விஜய் கட்சியில் உள்ளது கொள்கை அல்ல. அது கூமுட்டை. அதுவும் அழுகிப் போன கூமுட்டை’ என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதனால் சீமானுக்கும் விஜய்க்குமான யுத்தம் தொடங்கி இருக்கிறது. விஜய் மாநாடு நடத்துவதற்கு முன்புவரை கண்மூடித்தனமாக அவரை ஆதரித்து வந்த சீமான், இப்போது ஆக்ரோஷமாக எதிர்க்க தொடங்கி இருக்கிறார். கொள்கை எதிரி என்றால் விடமாட்டோம். பெற்ற தாயாக இருந்தால் கூட எதிர்ப்போம் என்றும் அவர் பேசி இருக்கிறார்.
இந்நிலையில் திராவிடம் என்பது என்ன? தமிழ்த் தேசியம் என்பது என்ன? ஆகிய இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு விளக்கி இருக்கிறார். அவர், “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்திற்குள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் பேசக் கூடிய மாநிலங்கள் ஒன்றாக இணைந்திருந்தன. இந்த நிலப் பரப்புக்கு திராவிடம் என்பது பெயர்.
அதை வைத்தே திராவிட நாடு என்று கொள்கை முன்வைக்கப்பட்டது. பின்னர் சீனப் போரின் போது நாட்டைக் காக்கும் விதமாக திராவிட நாடு கோரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், திராவிடம் பெரியார்தான் பேசிய தமிழ்நாடு தமிழருக்கே என்று முதல் முழக்கத்தை முன்வைத்தவர்.
கடந்த 1938 ஆண்டு மொழிப் போராட்டம் மிகப்பெரிதாக வெடித்த போது பெரியார்தான் அதை முன்னெடுத்தார். திராவிடம் என்பதையும் தமிழர் உரிமை என்பதையும் அவர் ஒன்றுபோலவே பாவித்தார். வடவேங்கடமும் தென்குமரியும் தமிழரின் நிலம் என தொல்காப்பியம் வைத்தது. அதைக் கையில் எடுத்த முன்னோடி பெரியார்தான். இவர் மொழியுரிமை, சாதி ஒழிப்பு ஆகிய இரண்டு வகையான போராட்டங்களைக் கையில் எடுத்தார். இவை இரண்டும் முக்கியமானவை. இதையே திராவிடம் என்று சொல்கிறார்கள்.
ஆனால், அதே சமயத்தில் இந்தியத் தேர்தல் அரசியலில் பங்கேற்றதால் திராவிடம் என்பது நீர்த்துப் போனது. இதனால் திராவிடம் என்பதற்கு ஒரு கெட்ட பெயர் வந்தது. அதை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு திராவிடத்தை எதிர்த்து தமிழ்த் தேசியம் என்று ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். அது தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாக இருக்கிறது. இவர்கள் தமிழ்த் தேசிய விடுதலை என்பதை முன்வைக்கவில்லை. தமிழ்நாடு என்ற மாநிலத்தில் முதல்வர் பதவியைப் பிடித்துவிட்டால் உரிமை கிடைத்துவிடும் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாகப் பிறமொழி பேசி வாழ்ந்துவரும் மக்களை தமிழர்களின் விரோதியைப் போலக் காட்ட முயல்கிறார்கள். அவர்களை எதிரிகளாக நினைக்கிறார்கள். எனவே பிறமொழி பேசுபவர்களை வெளியேற்ற ஒரு கொள்கை திட்டத்தை முன்வைக்கிறார்கள். அதைத் தமிழ்த் தேசியம் என்கிறார்கள். இது சரியாகக் கூற்று அல்ல. மிக ஆபத்தானது. இது ஒரு இனவாதம். பாசிச போக்கு. இதனால் பல தீமைகளே உருவாகும். சாதி ஒழிப்பு, சமூக நீதி என்ற அளவில் திராவிடம் என்பதற்குள் ஒரு தமிழ்த் தேசிய இருக்கிறது. இதை இரண்டையும் பிரிந்து எதிர்க் கருத்துகளைப் போல அணுகக் கூடாது. அது தவறான வாதம்” என்கிறார்.












Click it and Unblock the Notifications