வேற லெவல்.. தமிழர் வரலாற்றை அறிய “கடல் வழிப்பயணம்”! பட்ஜெட்டில் அசத்தல் திட்டத்தை அறிவித்த பிடிஆர்
"இந்த பயணங்கள் நம் இனத்தின் செம்மையான வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, கைவினைப் பொருட்கள், உணவு வகைகளை வெளிக்கொண்டு வருவதோடு தமிழ்நாட்டின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும்"
சென்னை: தமிழ்நாட்டின் கலை, வரலாறு உணவு, இலக்கியம், பண்பாட்டை, எட்டுத்திக்கும் பரப்பும் வகையில் தமிழ் பண்பாட்டு கடல் வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார். அதேபோல் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் எனவும் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2023 - 2024 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழ்நாடின் நிதிநிலை குறித்த அறிமுகத்துடன் பட்ஜெட் உரையை தொடங்கி பழனிவேல் தியாகராஜன், முதலில் தமிழ் வளர்ச்சித் துறை சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

நினைவிடம்
அவர் பேசுகையில், "தாய் தமிழை காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசனின் ஆகியோரின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் நினைவிடம் ஒன்று அமைக்கப்படும்." என்று தெரிவித்து இருக்கிறார்.

அம்பேத்கர் நூல்கள் மொழி பெயர்ப்பு
தொடர்ந்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "இந்திய அரசமைப்பின் தந்தையும் முற்போக்கு இந்தியாவின் சிற்பியுமான அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளை பரப்புவதற்காக அவரது படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும். இதற்காக அரசால் ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.

தமிழில் தொழில்நுட்பமும்
தொழில் நுட்பத்துறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டினை அதிகரிப்பதன் மூலம் தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு புகழ்பெற்ற வல்லுநர்களை கொண்டு தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு ஒன்று நடத்தப்படும். தமிழ் மொழியில் மென்பொருட்கள் அதிகளவில் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.

தமிழ் கடல்வழிப் பயணம்
கடல் தாண்டி கொடி நாட்டிய தமிழர் பெருமை கூறும் பண்பாட்டு விழுமியங்களை எடுத்து இயம்பும் வகையில் தமிழர் பண்பாட்டு தலங்களை இணைக்க தமிழ் பண்பாட்டு கடல் வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும். இந்த பயணங்கள் நம் இனத்தின் செம்மையான வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, கைவினைப் பொருட்கள், உணவு வகைகளை வெளிக்கொண்டு வருவதோடு தமிழ்நாட்டின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும்." என்றார்.












Click it and Unblock the Notifications