அழகான மொழி.. தினமும் படிக்கிறேன்.. தமிழை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்லணும்.. ஆளுநர் ரவி
சென்னை: தமிழ் மொழி மிகவும் அழகானது, சக்திவாய்ந்தது. தமிழ் மொழியை நான் கற்று வருகிறேன். தமிழ் மொழியை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேசியுள்ளார். நேற்று முன்தினம் தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என்று ஆளுநர் ரவி விமர்சித்து இருந்தார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என்ற விமர்சனத்தில் தொடங்கி திமுகவை சீண்டும் வகையில் ஆளுநர் ஆர் என் ரவி பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். ஆளுநரின் இந்த செயல்பாடுகளுக்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இவ்வாறாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு.. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து உள்ளது. இவ்வாறாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், ஆளுநர் ரவி, ஆர் எஸ் எஸ் ரவி போல செயல்படுவதாக திமுகவும் காட்டமாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
இதேபோல், ஆளுநர் ஆர்.என். ரவி, நாட்டில் தோன்றிய பல்வேறு பிரிவினை சித்தாந்தங்களுள் திராவிட சித்தாந்தமும் ஒன்று என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மாநில அரசின் சிலபஸ் தரம் மோசமா இருக்கிறது என்று ஆளுநர் ரவி நேற்று முன்தினம் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர் ரவி பேசுகையில், "தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது.
பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்" என்றார். தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை திமுக அரசு எதிர்த்து வரும் சூழலில், தமிழக அரசின் பாடத்திட்டத்தை ஆளுநர் ரவி விமர்சித்துப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகள் எழுந்தன. தமிழக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழ் மொழியை புகழ்ந்து ஆர் என் ரவி பேசியுள்ளார். தமிழ் மொழி மிகவும் அழகானது, சக்திவாய்ந்தது, தமிழ் மொழியை அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தமிழ் மொழி மிகவும் அழகானது. சக்திவாய்ந்த மொழி தமிழ். தமிழ் மொழியை நான் கற்றுக்கொண்டு வருகிறேன். தமிழ் பத்திரிக்கைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். யாராவது தமிழில் பேசினால் நான் புரிந்துகொள்கிறேன். தமிழ் மொழியை அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.












Click it and Unblock the Notifications