பால் தட்டுப்பாட்டை தவிர்க்க உடனடி ஆக்ஷன் தேவை! ஜி.கே.வாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!
ஆவின் பால் மக்களுக்கு காலத்தே கிடைக்க வேண்டும் எனக் கூறுகிறார் ஜிகே வாசன்.
சென்னை: பால் தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் தமிழக அரசு தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.
பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பசும்பாலை லிட்டர் ரூ.35 என்ற விலைக்கும், எருமைப்பாலை லிட்டர் ரூ.44 என்ற விலைக்கும் கொள்முதல் செய்கிறது ஆவின் நிறுவனம்.
பாலுக்கான உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது, அதற்கான கொள்முதல் விலை மிகவும் குறைவு என்பதால் பால் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''தமிழக அரசு, பால் கொள்முதல் செய்வதில் பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறும் வகையில் முடிவு வெளியிட வேண்டும். பால் உற்பத்தியாளர்களின் போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்.
அதன் மூலம் பால் கொள்முதல் செய்வதில் உள்ள பிரச்சனையை தீர்த்து, பால் விநியோகம் செய்வதில் தாமதமில்லாமல், நுகர்வோருக்கு, பொது மக்களுக்கு தடையில்லா ஆவின் பால் விற்பனை செய்யப்பட வேண்டும்.
எனவே அரசின் ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பால் இனிமேல் தட்டுப்பாடில்லாமல், பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் காலத்தே கிடைப்பதற்கு தமிழக அரசு தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.'' இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications