பிளஸ் 2, பிளஸ் 1 செய்முறை தேர்வு தேதி வெளியீடு.. மாணவர்களே நோட் பண்ணுங்க
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலேயே செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு என்பது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அரையாண்டு தேர்வுகள் முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் 11, 12ம் மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு தேதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பிப்ரவரி 7 ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். அதன்பிறகு பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 15 ம் தேதி முதல் பிப்ரவரி 21ம் தேதி வரை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக 10ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22ம் தேதி முதல் பிப்ரவரி 28 ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த ஆண்டு அறிவித்தார். அதேபோல் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருந்தது.
அதன்படி மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் மார்ச் மாதம் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 5ம் தேதி முதல் மார்ச் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. அதன்பிறகு மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல் 15ம்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பிறகு மே 9 ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 19ம் தேதி 10 மற்றும் பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications