தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் "கருக்கலைப்பு வாரியம்".. அதுவும் 32 இடங்களில்.. வெளியானது அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது குறித்து முடிவு செய்ய, அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி வாரியம் செயல்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு என்பது கொலைக்கு சமம்.. உயிரை கொல்வது.. இப்படி செய்யும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் விளைவுகள், பாதிப்புகளை யாருமே நினைப்பது கிடையாது..

எத்தனையோ இளம்பெண்கள், காதலில் ஏமாந்த கருவை சுமக்க நேரிடுகிறது.. பிறகு, இந்த கருவை கலைக்க தனியார் டாக்டர்களையும், போலி டாக்டர்களையும் நாடுகிறார்கள்..
பரிதாப உயிர்கள்: இதனால், பல இளம்பெண்களின் உயிர்கள் பரிதாபமாக பிரிய நேரிடுகிறது.. அதனால்தான் பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களுக்கு உரிமை உண்டு என்று பல நீதிமன்ற தீர்ப்புகள் சுட்டிக்காட்டி இருக்கின்றன.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, இந்த கருக்கலைப்பு கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.. கடந்த வாரம், ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே முதன்முறையாக கருவுற்ற ஒரு சில மாதங்களிலேயே கருவின் நிலையை முறையாக ஆய்வு செய்து குறை இருப்பினும், அதனை என்ன செய்யலாம் என்பதை பெற்றோர் முடிவெடுக்கும் வகையில் ஆய்வகம் ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் அமைந்துள்ளது.
விழிப்புணர்வு: கருக்கலைப்பு தொடர்பான ஆய்வகங்கள் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. சட்ட விரோத கருக்கலைப்பு, பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிக்கக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் ஆய்வகங்களில் வைக்கப்பட்டுள்ளன.. முறையான அனுமதியில்லாத ஆய்வகங்களுக்கும் சீல் வைக்கப்படுகிறது. சட்ட விரோத கருக்கலைப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது" என்றார்.
அதேபோல, சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடும்ப நலத்துறை துணை இயக்குனரும் 4 நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது குறித்து முடிவு செய்ய, அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி வாரியம் செயல்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு: இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அரசிதழில் சொல்லி உள்ளதாவது: மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு மேற்கொள்வதற்காக வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்கென தனி வாரியம் அமைக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளை பரிசோதனை செய்து சிசுவைக் கலைப்பதற்கான கருத்துகளை அந்த வாரியம் மூன்று நாள்களுக்குள் வழங்கும். அதேபோல, போதிய காரணம் இல்லையென்றால், கருக்கலைப்பு விண்ணப்பத்தை நிராகரிக்கவும் அந்த வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. மாநில அளவில் ஒரே ஒரு வாரியம் இதற்கென செயல்படுவதால் விண்ணப்பங்களின் மீது உரிய நேரத்தில் முடிவெடுக்க முடியாத நிலை இருப்பது அரசின் கவனத்துக்கு வந்தது.
அரசாணை: அதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள 32 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனித்தனியே கருக்கலைப்புக்கான அனுமதி வழங்கும் வாரியத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கல்லூரிகளின் முதல்வர் தலைமையில் மகப்பேறு மற்றும் பெண்கள் நலன், பச்சிளம் குழந்தைகள் நலன், கதிரியக்கவியல், குழந்தைகள் இதய நலன், குழந்தைகள் நரம்பியல் நலன் ஆகிய துறைகளின் தலைவர்களும், மனநல ஆலோசகர்களும், மருத்துவக் கண்காணிப்பாளரும், சிசு நல சிகிச்சை இணை பேராசிரியரும் அந்த வாரியத்தில் இடம்பெற்றிருப்பார்கள்.
அவர்கள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து உரிய முடிவை வழங்குவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications