மொத்தமாக மாற போகுது.. லிஸ்டில் கோவை, திருச்சி, மதுரை.. கூடவே தூத்துக்குடியும் இருக்கு! என்ன பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை போலவே மற்ற நகரங்களிலும் பல்வேறு வளர்ச்சி பணிகளை உறுதி செய்ய மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே இப்போது ஏஏஐ அமைப்பின் திட்டத்தில் கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் உள்ளன. இது தமிழகத்தின் மிக முக்கிய உள்கட்டமைப்பு முதலீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏர்போர்ட் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது.

விரிவாக்கம்: இதை உணர்ந்து தான் ஏர்போர்ட் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா அதாவது ஏஏஐ அமைப்பும் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து திருச்சி, மதுரை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்போவதாக ஏஏஐ அமைப்பின் தென் மண்டலத்தின் மண்டல நிர்வாக இயக்குநர் எஸ்.ஜி.பணிக்கர் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் கோவை, திருச்சி விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல மாற்றங்கள் வரவுள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கோவை ஏர்போர்ட்: முதலில் கோவை விமான நிலையம். இந்த ஏர்போர்ட்டின் விரிவாக்க பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கலே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. ஒரு வழியாக இந்த பணிகள் முடிந்துள்ள நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலம் குறித்த தகவல்கள் ஏஏஐ வசம் அனுப்பப்பட்டுள்ளது. இருகூர், நீலம்பூர், காளப்பட்டி, சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் ஆகிய கிராமங்களில் சுமார் 632.95 ஏக்கர் பரப்பளவு நிலம் விரிவாக்கத்திற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறிப்பாகப் பெரிய விமானங்களுக்கு இடமளிக்கும் வகையில் பெரிய ஓடுபாதை தேவை. தற்போதுள்ள ஓடுபாதை 2,990 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் பெரிய விமானங்களை நிறுத்த முடிவதில்லை. இதனால் பெரிய விமானங்களைக் கையாள ஏதுவாக பெரிய ஓடுதளம் கட்டப்படும் எனத் தெரிகிறது. இதன் மூலம் சர்வதேச விமானச் சேவையையும் சரக்கு போக்குவரத்தையும் அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி ஏர்போர்ட்: அடுத்து திருச்சி. அங்கும் விமான நிலைய விரிவாக்கம் நடைபெறுகிறது. அங்கு முதலில் ஓடுதளம் 6000 அடியாக இருந்த நிலையில், அது 8000 அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்தச் சூழலில் அதை மேலும் 12 ஆயிரம் அடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய விமானங்களைக் கையாள முடியும். இதற்குப் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 167 ஏக்கர் நிலம் உட்பட 500 ஏக்கர் நிலத்தை ஏஏஐ கோரியிருந்தது.

அதில் 95% பணிகள் முடிந்துவிட்டதாகவும் மீதமுள்ள பணிகளும் இன்னும் ஒரு மாதத்தில் முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், விரிவாக்க பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சியில் புதிய முனையம் கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்ட நிலையில், இப்போது ஏர் டிராபிக் கன்டிரோல் டவர் புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. அது அடுத்தாண்டு முதல் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
மதுரை ஏர்போர்ட்: மதுரை விமான நிலையத்தைப் பொறுத்தவரை அதற்கு இன்னும் சர்வதேச ஏர்போர்ட் அந்தஸ்து கிடைக்கவில்லை என்ற போதிலும், ஏற்கனவே துபாய், சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட சர்வதேச நகரங்களுக்கு விமானச் சேவை இருக்கிறது. உள்நாட்டிலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குச் சேவை இருக்கிறது.
அடுத்த சில மாதங்களில் விமானங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அதற்கேற்ப விமான நிலையத்தை மாற்றி அமைத்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். அங்கும் ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ₹312 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதன் கட்டுமானம் டிசம்பரில் முடியும் எனத் தெரிகிறது. அதேநேரம் ஏர் டிராபிக் டவரின் பணிகள் மார்ச் மாதம் வரை நடைபெறும் எனத் தெரிகிறது. 21 பயணிகள் செக்-இன் கவுண்டர்கள், மூன்று ஏரோ-பிரிட்ஜ்கள் மற்றும் இரண்டு கன்வேயர் பெல்ட்கள் இதில் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications