Srirangam: அந்த செவுரு எத்தனை பேர பலி வாங்க போகுதோ? ஜெ. அரசியல் வாழ்வை காலியாக்கிய ‘ஸ்ரீரங்கம் சென்டிமென்ட்’
சென்னை: தமிழக அரசியலில் சில தொகுதிகள் தனித்துவமான அரசியல் வரலாறுகளால் பேசுபொருளாக மாறுவது வழக்கம். அந்த வகையில், திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி கடந்த பல ஆண்டுகளாக ஒரு வித்தியாசமான 'ஸ்ரீரங்கம் சென்டிமென்ட்' காரணமாக கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசியல் வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வது தான் வழக்கம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த செண்டிமெண்டில் ஜெ.ஜெயலலிதா கூட்ட தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை 17 தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. இந்த வரலாற்றை ஆராய்ந்தால், இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பெரும்பாலான அரசியல்வாதிகளும் தொடர்ந்து அரசியல் ஏணியில் ஏறாமல், அதளபாதாளத்தில் விழுந்துள்ளனர்.
இதுவே 'ஸ்ரீரங்கம் சென்டிமென்ட்' என்ற பெயரில் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த சென்டிமென்ட்-ல் இருந்து தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கூட்ட தப்பவில்லை என்பது தான் வேதனையிலும் வேதனை.

1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சிற்றம்பலம் வெற்றி பெற்றார். ஆனால் அதன்பிறகு அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் 1957ஆம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். அதன்பின்னர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே. வாசுதேவன் வெற்றி பெற்றாலும், அவருக்கும் அடுத்த தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 1962 மற்றும் 1967 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.
எனினும் ஒவ்வொரு முறையும் புதிய வேட்பாளர்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் ஒருமுறை வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மறுமுறை போட்டியிட முடியாத நிலை உருவானது. இந்த நிலை அந்த காலகட்டத்திலேயே ஒரு விசித்திரமான அரசியல் நடைமுறையாக கருதப்பட்டது. பின்னர் 1977, 1980 மற்றும் 1984 தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர். செளந்தரராஜன் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார்.
அவர் எம்ஜிஆர் தலைமையிலான அமைச்சரவையில் பல்வேறு முக்கிய துறைகளை வகித்தார். எனினும் 1989ஆம் ஆண்டு அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் அதிமுக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பிரிவினைகளாலும் அவர் அரசியலில் பின்னடைவை சந்தித்தார். 1989ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ஒய். வெங்கடேஸ்வர தீட்சிதர் வெற்றி பெற்றார். ஆனால் 1991ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதால் அவரது பதவிக்காலம் முழுமையாக நீடிக்கவில்லை. பின்னர் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
1991ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.ப. கிருஷ்ணன் வேளாண்மை அமைச்சராக பதவி வகித்தார். ஆனால் 1996 தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்து புதிய கட்சியையும் தொடங்கினார். பின்னர் அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னரும் பல்வேறு அரசியல் மாற்றங்களை சந்தித்தார்.
1996ஆம் ஆண்டு திமுக சார்பில் வெற்றி பெற்ற டி.பி. மாயவனுக்கும் மறுமுறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் 2001ஆம் ஆண்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கே.கே. பாலசுப்பிரமணியனுக்கும் ஆரம்பத்தில் அமைச்சர்பதவி கிடைத்தாலும் பின்னர் அந்த பதவியை இழந்தார். கட்சியிலும் அவருக்கு முக்கியத்துவம் குறைந்தது.
இந்த தொகுதியின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான திருப்பமாக அமைந்தது 2011ஆம் ஆண்டு. ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் பின்னர் நீதிமன்ற வழக்கில் தண்டனை பெற்றதால் பதவியை இழக்க நேரிட்டது. இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ். வளார்மதி வெற்றி பெற்றார். அவருக்கு 2016ஆம் ஆண்டிலும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அமைச்சராக பதவி வகித்தாலும், பின்னர் அவருக்கும் இந்த தொகுதியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2021ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட எம். பழனியாண்டி வெற்றி பெற்றார். ஆனால் சமீபத்தில் கரூர் மாவட்டத்தில் நடந்த கல்குவாரி சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, வரும் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு 74 ஆண்டுகளுக்கும் மேலான இந்த தொகுதியின் அரசியல் வரலாற்றைப் பார்த்தால், இங்கு வெற்றி பெற்ற பலரும் கட்சிக்குள் அதிருப்தி, அரசியல் பின்னடைவு, நீதிமன்ற வழக்குகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. இதனால் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெறுவது ஒரு பெரிய சாதனையாக இருந்தாலும், அதன் பின்னர் அரசியல் வாழ்க்கையில் சவால்கள் உருவாகும் என்ற 'சென்டிமென்ட்' அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications