தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்று ஐதராபாத் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வில், புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய் சென்னையில் உள்ள தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடிப்பார் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் இந்த நிறுவனம் கணித்தப்படியே முடிவுகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டசபை தேர்தல்
தமிழகத்தில் இந்த முறை 4 முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது சக்தியாக பார்க்கப்படும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து தேர்தலை சந்திக்குமா அல்லது என்.டி.ஏ கூட்டணியில் இணையுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு 4 முனை போட்டியே நிலவுவதாக பார்க்கப்படுகிறது.
புதிதாக களம் இறங்கியுள்ள விஜய்யோ, 1967 மற்றும் 1977 -இல் நடந்தது போல இந்த முறையும் ஒரு அதிசயம் நிகழும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமையும் என பேசி வருகிறார். இன்னொரு பக்கம் திமுக திராவிட மாடல் 2.0 அமையும் எனவும், மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணி அமையும் என்றும் பேசி வருகிறார்கள். சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனித்து தேர்தலை சந்திக்கிறது.
ஆட்சியை தக்க வைக்கும் திமுக
இதனால் தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதனால் கருத்துக்கணிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தேசிய அளவில் சரியான கருத்துக்கணிப்புகளை வழங்கிய ஐதராபாத் நிறுவனம் தமிழக சட்டசபை தேர்தல் குறித்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி திமுக ஆட்சியே மீண்டும் அமைய வாய்ப்பு உள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது 41.5 சதவீத வாக்குகளை திமுக பெறும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி 36.2 சதவீதம் பெறும் எனவும், விஜய்யின் தவெக 13.6 சதவீதமும், சீமானின் நாதக 7.9 சதவீத வாக்குகளும் பெறும் என்று இந்த நிறுவனம் கணித்துள்ளது. தமிழகத்தின் மூன்றாவது சக்தியாக விஜய் கட்சி மாறியுள்ளது என்பதையே இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் காண்பிக்கிறது.
சென்னையில் தவெக 2 ஆம் இடம்
இதிலும் குறிப்பாக சென்னை நகரில் உள்ள பல தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2 ஆம் இடத்தினை பிடித்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி திமுகவிற்கு அடுத்தபடியாக 2-வது வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருவதையே இந்த முடிவு காண்பிக்கிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் முதல் இடத்தை திமுக பிடித்துள்ளது.
அதே நேரத்தில் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெக குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்று முன்னிலையில் இருப்பதாகவும் இந்த ஆய்வு குழு தெரிவித்துள்ளது.
துல்லியமான கருத்துக்கணிப்பு
ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கணிப்பு நிறுவனமாகிய 'கேகே சர்வேஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ்' நிறுவனத்தின் ஒரு அங்கமான - பாராவீல் தான் இந்த கருத்துக்கணிப்பினை நடத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அளவிலான விரிவான அறிவியல் பூர்வ கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டு இருக்கிறது.
70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் இந்த ஆய்வானது நடத்தப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டு இந்த விரிவான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. கடந்த 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2024 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றில் மிகத் துல்லியமான கணிப்பினை வழங்கி தேசிய அளவில் கவனம் பெற்றிருந்தது.












Click it and Unblock the Notifications