பரபரக்கும் தமிழகம்.. முன்கூட்டியே சட்டசபை தேர்தல்? 5 கண்டெய்னர்களில் வந்தாச்சு வாக்குப் பதிவு மெஷின்
சென்னை: தமிழகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. 5 கன்டெய்னர்களில் கோவை மாவட்டத்திற்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இன்று வருகை தந்துள்ளன.
Recommended Video
தமிழகத்தின், 15வது சட்டசபை ஆயுட்காலம் மே 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
எனவே, ஏப்ரல் மாதத்தில், தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்போது நிகழ்வுகள் வேறு மாதிரி நடக்க ஆரம்பித்துள்ளன.
அமைச்சருக்கு யார் முதலில் சால்வை அணிவிப்பது..? கைகலப்பில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள்..!
தேர்தல் அதிகாரிகள்
தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர், 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான இந்த குழுவில் துணை தேர்தல் கமிஷனர்கள் சுதீப் ஜெயின், ஆஷிஷ் குந்த்ரா, பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.ஸ்ரீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீ வத்சவா, தேர்தல் ஆணைய செயலாளர் மலே மல்லிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்டாலின் பேச்சு
தேர்தல் அதிகாரிகள் இப்போதே வருகை தருவதால் தேர்தல் முன்கூட்டியே நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்தன. அதுமட்டுமல்ல, திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று, தனது தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து அறிவித்தார். மிஷன் 200 என்ற பெயரில் 200 தொகுதிகளை வெல்ல திமுகவினருக்கு இலக்கு நிர்ணயித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
முதல்வரும் அதே கருத்து
தேர்தலுக்கு இன்னமும் சில மாதங்கள்தான் இருப்பதால், இப்போதே, தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
முதல்வரும் சரி, எதிர்க்கட்சி தலைவரும் சரி, முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளதாக கூறுவதை வைத்து பார்த்தால், அவர்களுக்கு ஏதோ ஒரு சமிக்ஞை கிடைத்திருப்பது தெளிவாக தெரிகிறது.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை
இந்த நிலையில்தான், பல்வேறு மாவட்டங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. உதாரணமாக கோவை மாவட்டத்திற்கு இன்று ஐந்து கண்டெய்னர் லாரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ளன. கோவை சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இவை பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
கோவை கலெக்டர் பேட்டி
அந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ராசாமணி பார்வையிட்டு வருகிறார். இதுபற்றி ராசாமணி கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 3048 வாக்கு பதிவு மையங்கள் உள்ளன. இன்று 4567 வாக்குப்பதிவு பெட்டிகள் வந்துள்ளன. ஏற்கனவே இந்த மாவட்டத்தில், 752 வாக்குப்பதிவு பெட்டிகள் உள்ளன.
மிஷின்கள் ஆய்வு
இங்கு வந்துள்ள வாக்குப்பதிவு பெட்டிகள் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இரண்டு நாட்கள் கழித்து பெங்களூரிலிருந்து, பெல் நிறுவன அதிகாரிகள் வருகை தந்து, ஒவ்வொரு மிஷினையும், அவை பயன்படுத்தும் வகையில் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அதற்கான சான்றிதழ் வழங்குவார்கள். இவ்வாறு கோவை மாவட்ட கலெக்டர் ராசாமணி தெரிவித்தார்.
தேர்தலுக்காக பரபரக்கும் தமிழகம்
ஒருபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதாக கூறுகிறார்கள்.. இன்னொரு பக்கம், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் நோக்கி படையெடுக்கிறார்கள்.. வாக்குப்பதிவு இயந்திரங்களும் வருகை தர ஆரம்பித்து விட்டன. எனவே இவை அனைத்தையும் வைத்துப் பார்த்தால் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக அதற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால் எந்த மாதத்தில் தேர்தல் நடைபெறும்? பிப்ரவரி மாதமா அல்லது மார்ச் மாதமா என பல்வேறு எதிர்பார்ப்புக்களை தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ளன.