மன்மோகன் சிங் - ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம்.. தமிழக சட்டசபை ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு நாள் முழுவதும் தமிழக சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
2025ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பது எப்போதும் ஆளுநர் உரையுடன் தான் தொடங்கும். அந்த வகையில் நேற்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை கூடியது.

சட்டசபைக்கு ஆளுநர் ஆர்என் ரவி வந்தார். அவர் வந்தவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. அதன்பிறகு ஆளுநர் ஆர்என் ரவி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஆளுநர் உரையை வாசிப்பார் என்று நினைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்என் ரவி அதை செய்யவில்லை.
வெறும் 3 நிமிடங்களில் அவர் வெளியேறினார். ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்துவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்என் ரவியின் செயலுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம் பெற்ற வாசகங்களை, சபாநாயகர் அப்பாவு படித்தார்.
அதன்பிறகு இன்று 2 நாள் சட்டசபை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்மொழி ராஜதத்தன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இனி நாளை காலை 9.30 மணிக்கு 3வது நாள் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த சட்டசபை கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications