குவைத் சென்று வந்த சபாநாயகர் அப்பாவு! எதற்காக இந்த பயணம்? பின்னணி என்ன?
சென்னை: உதயநிதி ஸ்டாலின் சுறுசுறுப்பாக செயலாற்றுகிறார் என குவைத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர்கள் ஐடி துறையில் சிறந்து விளங்குவதற்கு கருணாநிதி போட்ட அடித்தளமே காரணம் எனக் குறிப்பிட்டார்.
திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க குவைத் பிரிவின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவில் பங்கேற்பதற்காக அப்பாவு அந்நாட்டுக்கு சென்றிருந்தார்.
அந்த நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

காயிதே மில்லத்
''பெரியாரை கடவுள் மறுப்பாளர் என்று சுருக்கிப் பார்க்கக் கூடாது, கடவுளின் பெயரால் ஒரு சாரார் மற்றவர்களை ஆலயத்திற்குள் விடாமல், ஆலயம் உள்ள தெருவில் கூட அனுமதிக்காமல் இழிவுபடுத்துவதை எதிர்த்துதான் பெரியார் போராடினார். தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான பணிகளை முன்னெடுத்த பெருமை பெரியாரையேச் சேரும். சிறுபான்மை மக்களின் கல்விக்காக காயிதே மில்லத் ஆற்றிய பணிகள் ஏராளம்''.

டைடல் பார்க்
''1996 ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக தகவல் தொழில்நுட்பத் துறையை வளர்ப்பதற்காக டைடல் பார்க் அமைக்கப்பட்டது. அப்போதைய ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனும், கலைஞரும் எடுத்து கொண்ட முயற்சியால் தான் இன்றைக்கு தமிழக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று இந்த துறையில் கோலோச்சுகின்றனர். கலைஞரின் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக சட்டசபையில் காகிதமில்லா வரவு செலவு திட்டம் தாக்கல் செய்ய வைத்திருக்கிறார்.''

நேரடி ஒளிபரப்பு
''சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்து மக்கள் நேரடியாக சட்டசபை நிகழ்ச்சிகளை பார்க்க வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகளை அளிக்க வேண்டும் என்றும் அதை நிறைவேற்றித் தருவதாகவும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.''

ஜமால் முகம்மது கல்லூரி
''புதிதாக பொறுப்பேற்றுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சுறுசுறுப்பாக இயங்குகிறார்.'' இவ்வாறு குவைத் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசினார். இதனிடையே இவ்விழாவில் ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் டாக்டர். அமீர் அகமது, டி.வி.எஸ். குரூப் சேர்மன் எஸ்.எம்.ஹைதர் அலி, சுப்ரீம் குரூப் சேர்மன், ஒருங்கிணைப்பாளர் முஹம்மத், ஆலிம் அல் புகாரி, இப்ராஹீம், ஏ.சித்திக், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க குவைத் பிரிவின் சங்க நிர்வாகிகள் டாக்டர். முனீர் அகமது, ஜலாலுதீன், ரமேஷ், இதயத்துல்லா, குவைத் அனைத்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மற்றும் குவைத் வாழ் தமிழர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications