தமிழக வரலாற்றிலேயே முதன்முறை.. Live-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு! யாருமே செய்யாததை செய்த விஜய்!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமான நாளாக இன்று பார்க்கப்படுகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழக சட்டசபையில் நடந்தது. சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டப்பேரவையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படுவது அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை எந்த ஆட்சிக் காலத்திலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நேரடியாக மக்களுக்குக் காட்டப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
ஆனால், ஆட்சி அமைக்க தேவையான முழு பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு அமைந்தது.

தமிழக சட்டசபை
இதையடுத்து கடந்த 10ஆம் தேதி ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் புதிய எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நிரந்தர சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று நடைபெறும் கூட்டத் தொடரில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
விஜய் அரசு
அதற்காகவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பொதுவாக ஒரு அரசுக்கு சட்டப்பேரவையில் போதுமான ஆதரவு உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போதைய கணக்குப்படி தவெகவின் உறுப்பினர் பலம் குறைந்துள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த முதலமைச்சர் விஜய் அந்த உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால் ஒரு இடம் குறைந்தது. மேலும், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தவெக கூட்டணி
இதனால் தவெகவின் செயலில் இருக்கும் உறுப்பினர் எண்ணிக்கை 106 ஆக உள்ளது. ஆனால், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக கூட்டணியின் பலம் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை தாண்டுகிறது. அதனால், தற்போதைய நிலவரப்படி விஜய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தவெக தரப்பில் உள்ளது.
எஸ்.பி.வேலுமணி
இதற்கிடையில் அதிமுகவில் உருவாகியுள்ள உள்கட்சி மோதலும் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியை சேர்ந்த சில அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியும் திமுகவும் இந்த வாக்கெடுப்பில் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை நேரலை
இந்த பரபரப்பான சூழலில்தான், நம்பிக்கை வாக்கெடுப்பு நேரடியாக ஒளிபரப்பப்படுவது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டப்பேரவை நடவடிக்கைகளை பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது வெளிப்படைத்தன்மைக்கான முக்கிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. அரசியல் மாற்றங்களும், கூட்டணி கணக்குகளும் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் புதிய அத்தியாயமாக இன்றைய நேரலை நம்பிக்கை வாக்கெடுப்பு பதிவாகியுள்ளது.














Click it and Unblock the Notifications