அதிகரிக்கும் அச்சுறுத்தல்.. தமிழகத்தில் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! வெளியான அரசாணை
சென்னை: கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் நோய்வாய்ப்பட்டுள்ள தெரு நாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மோசமாக காயமடைந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் சுற்றித் திரியும் நாய்களை கருணை கொலை செய்யலாம் என்றும், அந்த நாய்களின் உடல்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நாய்களால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை கோவை மாநகர் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழக பெருநகரங்களைப் பொறுத்தவரை கடந்த 2006 ஆம் ஆண்டு, 70 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த தெரு நாய்களின் தொல்லை தற்போது ஒரு லட்சத்தை தாண்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த 2006 ஆம் ஆண்டு முதல் நாய்கள் கருத்தடை மையம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து இதே போல் திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளிலும் நாய்கள் கருத்தடை சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டன. ஆனாலும் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து தான் வருகிறது. கோவை மாநகரப் பொருத்தவரை ஆண்டுக்கு சராசரியாக 500க்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளில் பாதிக்கப்பட்டோர் ஒரு எண்ணிக்கை 10,000 கடந்து இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும் இதே நிலைதான் இருக்கிறது. தெருக்களை நூற்றுக்கணக்கில் சுற்றித் திரியும் நாய்கள் பெண்கள், முதியவர்கள், சிறுவர், சிறுமிகளைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் சாலைகளில் உலா வரும் நாய்களால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. தற்போது ரேபிஸ் பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணை கொலை செய்ய கேரளா அரசு அனுமதி அளித்தது.
கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் நோய்வாய்ப்பட்டு திரியும் நாய்களை கருணை கொலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்திலும் நோய்வாய்ப்பட்டுள்ள தெரு நாய்களை கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில்," : தமிழகத்தில் அதிகரித்து வரும் நாய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, இதில், நோய் வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்யலாம். இந்தப் பணியை பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். தெரு நாய்களால் பொது மக்களுக்கு ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கால்நடைத்துறை சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications