"உங்கள் தோப்பனார் சொன்னாரா.." தயாநிதி மாறன் பேச்சுக்கு பாஜக அண்ணாமலை பதிலடி.. ஆவேச பேச்சு
சென்னை: தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் கேட்ட கேள்விகள் இணையத்தில் டிரெண்டான நிலையில், இதற்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அரசுக்குத் தமிழ்நாடு போதிய நிதியைத் தருவதில்லை என்பதை இங்குள்ள அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். நாம் மத்திய அரசுக்குச் செலுத்தும் வரியில் மிகக் குறைவான தொகை மட்டுமே திருப்பி தரப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் கூட எதிரொலித்தது. நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், "எங்கள் வரிப்பணத்திலிருந்து நிவாரணத் தொகையைக் கொடுங்கள். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பா வீட்டுக் காசை கேட்கவில்லை என்று உதயநிதி கூறியிருந்தார்.
நிர்மலா சீதாராமன்: அதற்காக சுமார் ஒரு மணி நேரம் செய்தியாளர்களிடம் சந்திப்பை நடத்திய நிர்மலா சீதாராமன் எங்களை வசை பாடினார். உங்கள் அப்பன் வீட்டுக் காசு, உங்கள் ஆத்தா காசு என்றெல்லாம் பேசக்கூடாது என அறிவுறுத்தினார். சரி நான் இப்போது நிர்மலா சீதாராமனைப் பார்த்துக் கேட்கிறேன்.., உங்கள் தோப்பனார் வீட்டுக் காசையா கேட்கிறோம்? எனக் கேட்டால் நன்றாக இருக்குமா? இருக்காது இல்லையா? உங்கள் பேச்சில் வன்மம் உள்ளதால் அதைக் கண்டிக்கிறோம்" என்றார்.
தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு இணையத்தில் டிரெண்டானது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இப்போது பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாகச் சென்னையில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தயாநிதி மாறன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.. நிர்மலா சீதாராமனைப் பார்த்து உங்கள் தோப்பனார் பணமா எனக் கேட்டார்.
தோப்பனார் பணமா: நிர்மலா சீதாராமன் கண்ணியமான ஒரு நபர். அவர் இது குறித்தெல்லாம் பேச மாட்டார். ஆனால், நாடாளுமன்றத்தில் வைத்து தோப்பனார் பணமா என்று கேட்ட தயாநிதி மாறனுக்கு பாஜக சார்பில் நான் பதில் சொல்லவில்லை என்றால் அது பெரும் தவறாகிவிடும்.
தயாநிதி மாறனைப் பார்த்து நான் கேட்கிறேன்... முரசொலி மாறனின் மகன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே இன்று நீங்கள் இன்னும் அரசியலில் இருக்கிறீர்கள். இதைத் தவிர உங்களுக்கு அரசியல் இலக்கணம் எதுவும் இல்லை. 2011இல் சொந்த காரணங்களுக்காக அமைச்சரவையில் இருந்து வெளியேறியதாகச் சொன்னீர்கள். ஆனால், நீங்கள் ஊழல் செய்து அமைச்சரவையில் இருந்து துரத்தப்பட்டீர்கள் என்பது அனைத்து தமிழக மக்களுக்கும் தெரியும்.
தோப்பனார் சொன்னாரா: இன்று நான் கேட்கிறேன்.. அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என்று உங்கள் தோப்பனார் சொன்னாரா.. அமைச்சராக இருந்த போது பிஎஸ்என்எல் டெலிபோன் கனெக்ஷனை உங்கள் தனியார் டிவி நிறுவனத்தின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தினீர்கள். உங்கள் தோப்பனார் சொல்லியா அப்படிச் செய்தீர்கள்.. தலைமைச் செயலாளரைப் பார்த்துவிட்டு வந்து நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா என்றீர்கள்.. உங்கள் தோப்பனார் சொன்னாரா இப்படிப் பேச வேண்டும் என்று..
நீங்கள் பேசும் அதே மொழியில் எங்களுக்கும் பதில் பேசத் தெரியும்.. ஆனால் தேவையில்லாமல் பேச வேண்டாம் என இருக்கிறோம். வாரிசுகள் தான் இன்று சென்னை நகரின் எம்பியாக இருக்கிறார்கள். அவர்கள் சென்னையை மொத்தமாக நாசம் செய்கிறார்கள். இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்..
சென்னையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 எம்பிக்களும் நமது பிரதமர் மோடியின் கனவை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் புது சென்னையை நம்மால் கட்டமைக்க முடியும். தமிழ்நாட்டில் நாம் சரித்திரம் படைக்க போகிறேம்.. நாம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications