முதல்வர் இல்லத்திற்கு நேரில் சென்ற பாஜக தலைவர் முருகன்.. விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி தர கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.
கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு, இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது, ஊர்வலம் செல்வது போன்றவற்றுக்குத் தடை விதிப்பதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் வீடுகளிலேயே கொண்டாடுமாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதனிடையே தடையை மீறி விநாயகர் சிலையை நிறுவுவோம் என்று பல இந்து அமைப்புகள் பல அறிவித்துள்ளன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் அவரை நேரில் சென்று சந்தித்தார் பாஜக மாநில தலைவர் முருகன்.
சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இதற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முருகன், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் விநாயகர் சிலைகளை நிறுவி அவற்றை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க வேண்டும், என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
பஹ்ரைனில் கடையில் விநாயகர் சிலையை உடைத்து வாக்குவாதம் செய்த பெண்.. ஷாக் வீடியோ
விநாயகர் சிலையை நிறுவுவதற்கும், வழிபடுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். கோவில்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, கோவில் வளாகத்தில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டு, பின்னர் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அவற்றை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கலாம் என்பது எனது தரப்பில் வழங்கப்பட்ட ஆலோசனை. இவ்வாறு முருகன் தெரிவித்தார்.
மேலும், விநாயகர் சிலை தொடர்பான விவகாரங்களை தவிர்த்து வேறு எந்த விஷயமும் முதல்வருடனான, ஆலோசனையின்போது பேசப்படவில்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.