அப்படியே மாறிப்போன பாஜக.. "அதிமுக சிறந்த எதிர்க்கட்சி.." வாயார புகழ்ந்து பேட்டியளித்த அண்ணாமலை!
சென்னை: அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியிருக்கிறார்.
பிப்ரவரி மாதம் 19ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்கு இன்று, அண்ணாமலை தலைமையில் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் வருகைதந்தனர்.
அதிமுக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்ற ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட சீனியர் தலைவர்களுடன் சீட் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துக் கொண்டே சென்றது.
அதிமுக அலுவலகத்திற்கு நயினாரை விட்டு விட்டு போன அண்ணாமலை...பாஜக கேட்ட இடங்கள் கிடைக்குமா
அண்ணாமலை புகழாரம்
இதன் பிறகு வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அண்ணாமலை, அப்போது அவர் கூறியதாவது: வலுவான ஒரு எதிர்க்கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி, ஆளுகின்ற திமுக அரசு செய்கின்ற அனைத்து தவறுகளையும் அதிமுக மக்கள் மன்றத்தில் எழுப்புகிறது. அதன் மூலமாக திமுக தன்னை திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்ற ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார். மேலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
நயினார் ஆப்சென்ட்
இந்த கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பித்தபோதே, அது, பலவகைகளிலும் கவனிக்கத் தக்கதாக இருந்தது. அதிமுகவின் சட்டசபை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை. அதிமுக தலைமை, நயினார் நாகேந்திரன் மீது அதிருப்தியில் இருப்பதால்தான் பாஜக குழுவில் அவர் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது. மேலும் அதிமுக, பாஜக தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது மூன்று மணிநேரத்துக்கும் மேலாக அது நீண்டுகொண்டே செல்வதற்கு நயினார் நாகேந்திரன் விவகாரம் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது ஒரு முக்கியமான காரணம் என்று தெரிகிறது.
கேள்வி கேட்ட அதிமுக தலைமை
பாஜகவுக்கு தற்போது அதிக இடங்களை ஒதுக்கீடு செய்தால் அதிமுக தொண்டர்கள், நயினார் நாகேந்திரன் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்த பிறகு எப்படி உங்களால் அதிக சீட்களை ஒதுக்கீடு செய்ய முடியும் என்ற கேள்வியை தலைமையை நோக்கி எழுப்புவார்கள் என்பது, பாஜக தலைவர்களிடம், அதிமுக தலைமையின் கேள்வியாக எழுந்துள்ளது.
அதிமுக தொண்டர்களுக்கு மெசேஜ்
இந்த பிரச்சனை பெரும் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தான், அண்ணாமலை தனது பேட்டியில், அதிமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று புகழாரம் சூட்டி விட்டு சென்றிருக்கிறார். பாஜக தலைமையின் இந்த பாராட்டு மெசேஜ் கடைக்கோடி தொண்டர்களுக்கும் கொண்டு சென்று சேர்க்கப்பட்டால் அவர்கள் பாஜகவுடன் தேர்தல் பணிகளில் சுணக்கம் இல்லாமல் ஈடுபடுவார்கள் என்பது இரு கட்சி தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த அரசியல் பார்வையாளர்கள்.
பதுங்கும் பாஜக
இன்னும் 2 ஆண்டுகளில் லோக்சபா தேர்தலை சந்திக்க இருப்பதால் அதுவரை அதிமுகவுடன், பாஜக கண்டிப்பாக நட்பை தொடர வேண்டும் என்று டெல்லி தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. எனவேதான் நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சுக்கு உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிச்சாமியிடம் அண்ணாமலை வருத்தம் தெரிவித்தார். மேலும் அதிமுக கட்சியை இன்று தனது பேட்டியில் புகழ்ந்துரைத்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.