தோனியின் கடைசி ஆட்டம்? சேப்பாக்கம் வருகிறாரா முதல்வர் விஜய்? விசில் சத்தம் பறக்கபோகுது
சென்னை: இன்று சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே - எஸ்.ஆர்.ஹெச் இடையேயான போட்டி நடைபெறுகிறது. இது எம்.எஸ் தோனிக்கு கடைசி போட்டி என கூறப்படுவதால், ஐபிஎல் போட்டியை நேரில் காண தமிழக முதல்வர் விஜய் ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் அமைச்சரவை சகாக்களும் போட்டியை ரசிக்க விரும்பியதால், விஐபி கேலரியில் உள்ள அனைத்து டிக்கெட்களையும் முதல்வர் அலுவலகமே முன்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
ஐபில் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் தனது கடைசி ஆட்டத்தில் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. கட்டாயம் வெற்றி பெற வேண்டிய வாழ்வா சாவா போட்டியில் சென்னை அணி இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க சென்னை அணி இன்று கட்டாயம் வெல்வது அவசியம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனியின் கடைசி ஆட்டமாக இது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நடப்பு சீசனில் இதுவரை ஒரு போட்டியில் கூட தோனி விளையாடவில்லை.
சிஎஸ்கே போட்டியை காண விஜய் வருகிறார்?
இருந்தாலும் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டிதான் அவரது ஐபிஎல் கேரியரில் கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று சொல்லப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்றைய போட்டியில் தோனி விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியை காண தமிழக முதல்வர் விஜய் வரக்கூடும் என்று தகவல்கள் பரவுகின்றன.
விஜய் போட்டியை பார்க்க வந்தால் அவருடன் அமைச்சர்களும் பார்க்க வரக்கூடும். இதனால், விஐபி கேலரியில் உள்ள மொத்த டிக்கெட்டையும் முதல்வர் அலுவலகம் தரப்பு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. முதல்வர் விஜய் இந்த போட்டியை காணும் சூழல் நிலை இருப்பதால் பாதுகாப்பு வசதிகளையும் மேம்படுத்த காவல்துறை கூறியுள்ளது.
தல - தளபதி தரிசனம் கிடைக்குமா?
முதல்வர் விஜய் மற்றும் தோனி ஒரே நேரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோன்றினால் அரங்கம் அதிரும் அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் போட்டியை காணவரும் பட்சத்தில் தோனி - விஜய் சந்திப்பு நிகழக்கூடும் என்று ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடைசியாக தோனியும் விஜய்யும் கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தித்துள்ளனர். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது, அங்கு தோனி பங்கேற்ற விளம்பரத்திற்கான ஷூட்டிங்கும் நடைபெற்றது. அப்போது இருவரும் சந்தித்துக்கொண்டனர். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், இன்று தல - தளபதி தரிசனம் கிடைக்குமா? என ரசிகர்கள் மெகா எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறர்கள். சமூக வலைத்தளங்களிலும் இன்றைய ஐபிஎல் போட்டி டிரெண்டிங் ஆகி வருகிறது.













Click it and Unblock the Notifications