பேன்ட்டை முட்டி வரை மடித்து கொண்டு! வயலில் இறங்கிய ககன்தீப் சிங்! விஜய்யின் சூப்பர் மூவ்! யார் இவர்?
சென்னை: தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று நடந்த மாற்றத்தில் நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் யார் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் பதவியேற்ற நாள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். முதலில் முதல்வரின் தனிச் செயலாளர்கள் மாற்றப்பட்டு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்றைய தினம் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடந்துள்ளது. அதில் முக்கிய அதிகாரியான ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதாவது அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் இணைந்து செயல்படுவார்.
யார் இந்த ககன்தீப்
ககன்தீப் சிங் பேடி யார் என்பதை பார்க்கலாம். பஞ்சாப் மாநிலத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்தவர். பிஇ (இசிஇ) படித்துள்ளார். பின்னர் 1991 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துறையில் இந்திய பொறியியல் சேவைகள் பிரிவில் தேர்வானார். 1993 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வென்றார்.
ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானவுடன் தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மதுரை, கன்னியாகுமரி, கடலூர் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக குடிநீர் விநியோகத்தின் இயக்குநர், ஊரக வளர்ச்சி துறையின் செயலாளராக நியமிக்கப்பட்ட ககன்தீப் சிங், 2016ஆம் ஆண்டு தமிழக வேளாண் துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
2003, 2004 இல் கன்னியாகுமரி, கடலூர் மாவட்டங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத சுற்றுலா திட்டங்களை கொண்டு வந்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலின் போது கடலூர் மாவட்ட மக்களை மீட்கும் பணியில் சிறப்பாக செயல்பட்டார். சுனாமியால் வீடிழந்தவர்களை தங்கவைப்பது உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்தவர்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக விருது பெற்றார். 2015 ஆம் ஆண்டு கடலூரில் வெள்ள பாதிப்பின் போது இவர் ஆற்றிய தொண்டு சிறப்பானது.
கடந்த 2015-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் சென்னையிலிருந்து வீட்டை விட்டு கடலூருக்கு புறப்பட்டார். அப்போது ஒரு மாதம் தொடர்ந்து கடலூரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். ஒரு நாள் கடலூரில் மழை நின்றுவிட்டது என கருதி சென்னைக்கு காலையில் சென்றார். ஆனால் கடலூரில் மழை மீண்டும் தொடங்கியது.
இதனால் காலையில் சென்ற ககன்தீப் அன்று மதியமே கடலூர் திரும்பினார். குடும்பத்தினரை விட்டுவிட்டு மக்கள் சேவையாற்ற வேண்டும் என ஒரு சில அதிகாரிகளுக்குத்தான் மனம் வரும் அந்த ஒரு சிலரில் ககன் தீப் சிங்கும் ஒருவர். அதிகாரிகளிலேயே வித்தியாசமானவர்.
2017ஆம் ஆண்டு கோவை அருகே சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பலியான சம்பவத்தை விசாரணை நடத்தும் பொறுப்பையும் ஏற்றார். கஜா புயலின் போதும் மக்கள் பணியாற்றினார். 2020ஆம் ஆண்டு வேளாண்துறை செயலாளராக இருந்த போது வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க அரும்பங்காற்றியவர்.
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூபாய் 6000த்தை மூன்று தவணைகளாக வழங்கும் திட்டத்தில் 110 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக பேட்டி கொடுத்தது அல்லாமல் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கையையும் எடுத்தார். நிவர் புயல் சென்னை அருகே கரையை கடந்த போது கடலூரில் பெய்த கனமழையால் பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கின. இதை பார்வையிட அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கடலூர் சென்றார். அங்கு வேட்டியை மடித்துக் கொண்டு வயலில் எடப்பாடி பழனிசாமி இறங்கிய போது தனது பேன்ட்டை முட்டி வரை மடித்துவிட்டுக் கொண்டு பாதிப்பு குறித்து விளக்கிக் கொண்டிருந்தார்.
வகித்த பதவிகள்
சிவகாசி மற்றும் சேரன்மகாதேவி சார் ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், கன்னியாகுமரி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் (2004 சுனாமி மீட்புப் பணியில் முக்கியப் பங்கு வகித்தார்) போன்ற பதவிகளை வகித்துள்ளார். மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர், வருவாய்த்துறைச் செயலாளர், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவக் கல்வித் துறைச் செயலாளர் போன்ற பல்வேறு மிக முக்கியப் பொறுப்புகளைத் திறம்பட வகித்துள்ளார். தற்போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வரும் ககன்தீப், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications