அமித்ஷாவின் க்ரீன் சிக்னலுக்காகக் காத்திருக்கும் 5 எம்.எல்.ஏ-க்கள்? யார் அந்த ஜான் பிரிட்டோ?
சென்னை: அமித்ஷா நினைத்தால் இந்த ஆட்சியை இப்பொழுதே கவிழ்த்துவிடலாம். ஒரு அமைச்சர் மீது இவ்வளவு பெரிய போதைப்பொருள் புகார் வந்தும் அரசாங்கம் அமைதி காக்கிறது. ஏனென்றால் இது பதில் இல்லாத அரசாங்கம், முதலமைச்சருக்குப் பதிலே தெரியாது. "கரூர் பார்" செய்தி போன்ற எதையாவது கிளப்பிவிட்டு திசைதிருப்பும் அரசியலைச் செய்கிறார்கள் என்று காரசார விமர்சனத்தை முன்வைத்துள்ளார் அரசியல் விமர்சகரும் விஞ்ஞானியுமான டாக்டர் வி. பொன்ராஜ்.
பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ள பொன்ராஜ், "கூட்டணி கட்சிகள் அனைத்தும் வலையில் விழுந்த பிறகு, மீன் வலையில் சிக்கிய கதையாகத்தான் மாறியுள்ளன. ஐஎம்எல், கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் ஆகிய அனைத்துக் கட்சிகளும் வலையில் மாட்டிவிட்டன, இனி அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தங்களைத் தாங்களே அடகு வைத்துவிட்டார்கள்.

இப்போது தமிழக வெற்றிக் கழகம் வலை வீசினாலும், அதன் பின்னணியில் இருப்பது பாஜகதான்.. இவர்களுடைய நம்பகத்தன்மையை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க வைத்தால், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்று கொஞ்ச நாட்களுக்கு அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
குதிரை பேரம் நடக்கிறதா
அதன்பிறகு குதிரை பேரத்தில் ஈடுபட்டு விஜய்க்கு ஒரு 12 எம்.எல்.ஏ-க்களைக் கொண்டு வந்துவிட்டால், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்கும். அதில் அவர்கள் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை கிடைத்துவிட்டால், அது பாஜகவின் முழுமையான ஆட்சியாக மாறிவிடும்.
பதவி ஆசையும் பணத்தாசையும் ஒரு மிகப்பெரிய மனிதனைக் கூட நிலைகுலையச் செய்துவிடும் என்பதற்கு வைகோ மிகப்பெரிய உதாரணம். குதிரை பேரத்தைச் சட்டப்பூர்வமாகச் செய்யச் சொல்லித் தூண்டியவர் முதலமைச்சர் ஜோசப் விஜய் என்று பகிரங்கமான கூட்டத்தில் வைகோவே உடைத்துப் பேசியுள்ளார்.
மாநிலத்தில் நாள்தோறும் குதிரை பேரம் நடக்கிறது, அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு சனிக்கிழமை தோறும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்கள். இதுவரை 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அமித்ஷா அவர்கள் இன்னும் ஒரு 5 பேர் வரட்டும் என்று காத்திருக்கிறார்.
"நான் குதிரை பேரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்று கூறிய ஆளுநர் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறார், சபாநாயகரும் இதற்குத் துணை போகிறார். வைகோவின் 2 எம்.எல்.ஏ-க்கள் சுயமரியாதை உள்ளவர்கள், அதனால் அவர்கள் வரவில்லை. இப்போது வைகோவின் பின்னால் எந்தக் கட்சியும் இல்லை, நிர்வாகிகள் அனைவரும் திமுகவில் இணைந்துவிட்டனர். வைகோவும் அவரது மகனும் பேசாமல் கட்சியைத் கலைத்துவிட்டு விஜய்யுடன் போய்ச் சேர்ந்து கொள்ளலாம்.
உள்துறை அமைச்சகமும் ஆளுநரும் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால், பாஜகவிற்கும் ஜோசப் விஜய்க்கும் இடையே ரகசிய உடன்பாடு இருக்கிறது என்ற உண்மை வெளிவந்துவிட்டது.
அமித்ஷா நினைத்தால்
அமித்ஷா நினைத்தால் இந்த ஆட்சியை இப்பொழுதே கவிழ்த்துவிடலாம். ஒரு அமைச்சர் மீது இவ்வளவு பெரிய போதைப்பொருள் புகார் வந்தும் அரசாங்கம் அமைதி காக்கிறது. ஏனென்றால் இது பதில் இல்லாத அரசாங்கம், முதலமைச்சருக்குப் பதிலே தெரியாது. "கரூர் பார்" செய்தி போன்ற எதையாவது கிளப்பிவிட்டு திசைதிருப்பும் அரசியலைச் செய்கிறார்கள்.
ஆங்கில ஊடகங்கள் இதைப் பேசினாலும், இங்கு இன்ஸ்டாகிராம் பார்த்து வாக்களிக்கும் கூட்டம், இது வெறும் பவுடர் அல்லது மாத்திரைத்தூள் என்று சொன்னால் அதை அப்படியே நம்பிவிடும்.
இலங்கைக்குக் கடத்த முயன்ற 252 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளைக் கடலோரக் காவல்படையும் அமலாக்கத்துறையும் பறிமுதல் செய்துள்ளன. இந்த வழக்கில் ஜான் பிரிட்டோ என்பவரைக் குற்றவாளியாக அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. ஆனால், அந்த ஜான் பிரிட்டோ முதலமைச்சர் விஜய்யின் மாமா இல்லை என்று அவர்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் பிரிட்டோ யார்
குற்றவாளியே "நான் குற்றமில்லை"என்று சொல்லிவிட்டால் காவல்துறை அப்படியே விட்டுவிடுமா? சரி, அவர் இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அமலாக்கத்துறை குறிப்பிட்ட அந்த உண்மையான ஜான் பிரிட்டோ யார்? அதைத் துப்புத்துலக்கிக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்குத்தானே இருக்கிறது?
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதில் தீவிரமாக இருக்க வேண்டிய காவல் துறை, இவ்வளவு பெரிய வழக்குகளை ஆராயாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது? மாறாக, தங்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது பொய் வழக்குகளை புனைவதிலும், பழிவாங்கும் நடவடிக்கைகளிலுமே காவல்துறை தங்களது நேரத்தையும் திறமையையும் வீணடித்து வருகிறது.
தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை, விஐபி பாதுகாப்பு என்ற பெயரில் பனையூரிலிருந்து தலைமைச் செயலகம் வரை நூற்றுக்கணக்கான போலீசாரை வழிநெடுகிலும் நிற்க வைத்து மனிதவளத்தைக் கடுமையான முறையில் விரயம் செய்கிறது.
நான் 40 நாடுகளுக்கு சென்றுள்ளேன், அங்கெல்லாம் மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் 4 பைக்குகளுடன் பாதுகாப்பு வாகனப் பேரணி சென்றுவிடும். இந்த நிர்வாகத் திறமையைக் கொண்டுவர முடியவில்லை என்றால் நீங்கள் என்ன மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறீர்கள்?" என்றெல்லாம் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications