’கொடி’ பறக்குதா? திருச்சி கிழக்கில் திரிஷா? விட்டுக் கொடுத்த லாரன்ஸ்! பற்றி எரியும் சோஷியல் மீடியா!
சென்னை: முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொகுதியில் யார் களமிறங்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது அங்கு போட்டியில்லை என அறிவித்துள்ளார். இதனால் வேறு சில கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பல முகங்களைக் கொண்ட ராகவா லாரன்ஸ், சமூக சேவைகளுக்காகவும் தனி அடையாளம் பெற்றவர். மாற்றுத்திறனாளிகள், ஏழை மாணவர்களுக்காக அவர் செய்த பல உதவிகள் காரணமாக பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக அறியப்படும் லாரன்ஸ், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவார் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரவலாக இருந்தது.
ராகவா லாரன்ஸ்
ஆனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தில் இருந்து விலகியதால், லாரன்ஸின் அரசியல் வருகையும் அப்போது தள்ளிப்போனது. இதற்கிடையில் பலமுறை அவரது அரசியல் வருகை குறித்து தகவல்கள் வெளியானாலும், அவர் எந்தக் கட்சியிலும் இணையவில்லை. இதனால் அரசியலுக்கு வருவாரா, வரமாட்டாரா என்ற கேள்வி நீண்ட காலமாக நீடித்து வந்தது. இந்த நிலையில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
அரசியல் வருகை
இதற்கு விளக்கம் அளித்த லாரன்ஸ், அரசியல் தொடர்பாக ஒரு முக்கிய முடிவை விரைவில் அறிவிப்பேன் என்றும், தனது தாயாரின் ஆசீர்வாதத்துடன் அந்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புவதாக கூறினார். அதில் ஒன்று திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.
விஜய்
"என் குடும்பத்தினரிடம் கருத்து கேட்பது போலத்தான் மக்களிடமும் கேட்கிறேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் தவறு இல்லை. திருச்சி கிழக்கு தொகுதி தொகுதியில் நான் போட்டியிட மாட்டேன். விஜய் ஹீரோவாக இருந்த காலத்திலிருந்தே அவருக்காக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். போஸ்டர் ஒட்டியவர்கள், கட்சி ஆரம்பித்த நாள் முதல் பாடுபட்டவர்கள், கட்சியை வளர்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்போது நான் வந்து அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது" என்றார்.
தவெக தொண்டர்கள்
மேலும், "ஒருவர் மரம் நட்டு வளர்த்துவிட்டு, அதில் வரும் பழத்தை வேறு ஒருவர் பறித்து சாப்பிடுவது போல அது இருக்கும். அந்த உழைப்புக்கு உரியவர்களுக்கே வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதுதான் தர்மம்" என்று கூறினார். இந்த கருத்து, தவெக தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையே ராகவா லாரன்ஸ் வெளிப்படுத்தியதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்
அதே நேரத்தில், திருச்சி கிழக்கில் போட்டியிட மாட்டேன் என்று கூறியிருந்தாலும், அரசியலுக்கு வரமாட்டேன் என்று எங்கும் கூறவில்லை என்பதை ராகவா லாரன்ஸ் தெளிவுபடுத்தினார். "நான் இந்த தொகுதியில் மட்டுமே நிற்க மாட்டேன் என்று சொல்கிறேன். வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவில்லை. சரியான நேரத்தில், சரியான முடிவை எடுப்பேன். அவசரப்பட விரும்பவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்காகவே அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
நடிகை திரிஷா
இதற்கிடையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகை திரிஷா போட்டியிடலாம் என்ற தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், அந்த விவாதம் இன்னும் ஓயவில்லை. இந்த சூழலில் ராகவா லாரன்ஸ் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்ததும், "திரிஷாவுக்காக லாரன்ஸ் விட்டுக் கொடுத்துள்ளாரா? என்ற கேள்வி மீண்டும் சமூக வலைதளங்களில் எழத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications