தமிழக பட்ஜெட் 2023-24 மார்ச் 20ல் சட்டசபையில் தாக்கல்..அதிமுக இருக்கையில் மாற்றமில்லை - அப்பாவு
தமிழகத்தின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை: 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் மூன்றாவது நிதிநிலை அறிக்கையாகும். மகளிருக்கு மாதம் ரூ.1000உரிமைத் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் வெளியாக உள்ளது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20ஆம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசிப்பார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் இருக்கைகள் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காகிதம் இல்லாத பட்ஜெட் என்பதால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களுக்கு பட்ஜெட் நகல் வழங்கப்படாது.
செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் மு.அப்பாவு, மார்ச் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தமிழக நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்வார். அன்று அலுவல்ஆய்வுக்குழு கூடி, பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். சட்டசபையில் யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை என்றும் சபாநாயர் அப்பாவு கூறினார். அதிமுக இருக்கை விவகாரத்தில் பழைய முறையே பின்பற்றப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் நிச்சயம்நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இவை தொடர்பான அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
திமுக தேர்தல் அறிக்கையின்படி வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பெரும்பாலும் மார்ச் 21ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications