ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில் தேவையின் அடிப்படையில், 2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2,500 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். மொத்தம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதனால், இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி பல்வேறு திட்டங்கள் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிக் உயர் கல்வித்துறைக்கு 8,494 கோடி ரூபாயும், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 46,767 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு கூறியதாவது:-

கல்விக் கடனுக்காக 2500 கோடி
* நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள் என்ற உயரிய நோக்கத்துடன் முன்னோடித் திட்டங்களை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடும் வகையில் கடந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்ப் புதல்வன் அரசு திட்டத்தில் 3.80 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
* அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடும் பொருட்டு அவர்கள் தங்களுடைய பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வெளிநாட்டிலுள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்றிட உதவித்தொகை அளிக்கும் வகையில் 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில் தேவையின் அடிப்படையில் 2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2,500 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதை இந்த அரசு உறுதி செய்திடும்.
1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
* இன்றைய அரும்புகள், நாளைய மலர்கள், இன்றைய மழலைகள், நாளைய நமது மரபு காக்கும் மாண்புறு செல்வங்கள், அவர்களை வளமோடு வாழ வைப்பது அரசு, ஆடவர், பெண்டிர் இம்மூவரின் ஒத்துழைப்பின்பாற் பட்டதாகும் 1971-72 நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் இந்த வாசகங்களை மனதில் இருத்தி, நமது அரசு பலமுன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
* பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பெயரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2025-26 ஆம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடும் பொருட்டு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் கற்றல் கற்பித்தல் சூழலை நவீனமாக்கிட இந்த அரசு உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. 2025-26 ஆம் ஆண்டில் 2000 பள்ளிகளுக்கு 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வரும் பள்ளிகளில் உள்ள 880 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். மேலும், அரசுப் பள்ளிகளில், 2025-26 ஆம் ஆண்டில் 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
ஆசிரியர்கள் பணி நியமனம்
* 2025-26 ஆம் ஆண்டில் 1721 முதுகலை ஆசிரியர்களும் 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள். இதற்கான தேர்வு அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும்.
* அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றும் உயர்ந்த நோக்கத்தோடு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வும். சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
* கடந்த இரண்டு ஆண்டுகளில், 780 அரசுப் பள்ளி மாணவர்கள் இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT). தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (NLU) உள்ளிட்ட நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சிறப்பிடம் பெற்று சேர்க்கை பெற்றுள்ளனர். மேலும், 12 மாணவர்கள் முழுக் கல்வி உதவித்தொகையுடன் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருகின்றனர்.
500 அரசுப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள்
* இதன் அடுத்தகட்டமாக 20 வகையான கல்விப் பிரிவுகளில் 350-க்கும் மேற்பட்ட பல்வேறு அகில இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உள்ள கல்வி உதவித்தொகையுடன் கூடிய பட்டப் படிப்பு வாய்ப்புகள் குறித்தான விழிப்புணர்வு, நான் முதல்வன்-கல்லூரிக் கனவு திட்டம் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய முயற்சிகள் எடுக்கப்படும். முதற்கட்டமாக மாநிலத்தின் அனைத்து 388 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்தான விழிப்புணர்வு மற்றும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.
* இதன் மூலம், இந்த 500 அரசுப் பள்ளிகள் மட்டுமன்றி அருகில் அமைந்திருக்கும் இதர அரசுப் பள்ளி மாணவர்களும் பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திடும் ஒரு இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் முதற்கட்டத்தில் பயனடைவார்கள். நான் முதல்வன் கல்லூரிக் கனவு திட்டத்தின் மூலம். குறைந்தது. 2000 அரசுப் பள்ளி மாணவர்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சிகரம் தொடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கென 50 கோடி ரூபாய் இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படுகிறது.
* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ் பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications