என்னங்க தமாஸ் பண்றீங்களா? டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவியா? துரை முருகன் என்ன இப்படி சொல்றாரு!
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் உலவும் நிலையில் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு மூத்த அமைச்சரான துரை முருகன் அளித்த பதில் வியப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக தலைவராக இருந்த முக ஸ்டாலின் முதல்வரானார். அவரது தலைமயின் கீழ் அமைச்சர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதன்பிறகு ஒரு ஆண்டில் அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். அவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். தற்போது 2 ஆண்டு ஆட்சி முடிவடைந்த நிலையில் 3வது வருடத்தில் திமுக அரசு காலடி எடுத்து வைத்துள்ளது.

இந்நிலையில் தான் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துறை வாரியாக அமைச்சர்களின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்ட நிலையில் சிலர் திறமையாக செயல்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி நீக்கம் செய்யப்படலாம் எனவும், அதற்கு பதிலாக தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா, மற்றும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தான் இன்று மூத்த அமைச்சர் துரை முருகன் ஆளுநர் ஆர்என் ரவியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதுபற்றி துரை முருகனிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் ஆளுநர் ஆர்என் ரவியை தான் சந்திக்கவில்லை என கூறினார். மேலும், நான் 2 நாட்களாக சென்னையில் இல்லை. நான் திருநெல்வேலி சென்றிருந்தேன். இன்று தான் சென்னை வந்தேன். அமைச்சரவை மாற்றம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் ஆளுநர் வீட்டுக்கு செல்லவில்லை'' என்றார்.
இந்த வேளையில் அமைச்சரவையில் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறதாமே? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துரை முருகன் சிரித்தபடி, ‛‛அதுபற்றி எனக்கு தெரியாது. பதவியேற்பு விழா இருந்தால் போவோம்'' என்றார். இந்த வேளையில் ‛‛மூத்த அமைச்சர், பழுத்த அரசியல்வாதி என்ற முறையில் அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான அவசியம் இருப்பதாக நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு துரை முருகன் ‛‛இதுபற்றி முதல்வர் தான் முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.
இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர்‛‛அமைச்சர்கள் மாற்றம் செய்யும் தகவல் பற்றி மூத்த அமைச்சர்கள் பதற்றத்தில் உள்ளனர். இளைஞர்கள் அமைச்சர் பதவி கிடைக்காதா என ஏக்கத்தில் உள்ளனர். ஆனால் நீங்கள் உறுதியாக பதில் அளிக்காமல் உள்ளீர்களே?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு துரை முருகன், ‛‛நான் மூத்த அமைச்சர் தான் எனக்கு எந்த பதற்றமும் இல்லையே'' என்றார்.
இதன் தொடர்ச்சியாக டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதை கேட்ட துரை முருகன், ‛‛எல்லாமே நீங்களே சொல்றீங்க.. தமாஸ் பண்ணலாம் என வந்துள்ளீர்களா?'' என கூறிவிட்டு சிரித்தார்.மேலும் இந்த பேட்டியின்போது அவர் கூறுகையில், ‛‛இதுபோல் ஏர்போர்ட், திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அமைச்சரவை மாற்றம் பற்றி கேட்கின்றனர்கள். அமைச்சரவை குறித்து தெரிந்தால் நானே சொல்வேன். அது ஒன்றும் உலக ரகசியம் இல்லையே'' என்றார். இருப்பினும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பாசிட்டவாக எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications