என்னாது மேகதாது அணையா? ஏன் திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்? பிரஸ் மீட்டில் கடுப்பான துரைமுருகன்
சென்னை: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த நிலையில் ஏன் எப்போது பார்த்தாலும் மேகதாது குறித்தே கேட்கிறீர்கள் என அமைச்சர் துரைமுருகன் கோபமாக கேள்வி எழுப்பினார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கடந்த 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் கருத்துகள் அனைத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர் வள குழுமத்திடம் தெரிவிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது தவறான தகவல் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மறுத்தார்.
மேலும் தமிழக அரசின் கருத்துகளைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது துரைமுருகனிடம் மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு துரைமுருகன், "எந்த அரசாக இருந்தாலும், எந்த ஒரு ஆணையமாக மேகதாதுவில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்றார். மீண்டும் மேகதாது அணை குறித்த கேள்வியை வேறு ஒரு செய்தியாளர் கேட்ட போது "ஏன் இந்த கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்" என துரைமுருகன் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் போது, தமிழக காங்கிரஸ் ஏன் மேகதாது அணை விவகாரத்தில் தலையிடக் கூடாது என்ற கேள்வி நீண்ட நாளாகவே எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸும் கர்நாடகா காங்கிரஸும் வேறு வேறு. நம் உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். அவர்களது மாநில உரிமைக்காக அவர்கள் போராடுகிறார்கள் என்றார்.
அதே வேளையில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசுடன் தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகா மாநில அரசு சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பது தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம், காவிரி நீர் பகிர்வு குறித்த நிலைமைகள், தமிழக விவசாயிகளின் ஆயுள் வாழ்வாதாரம் ஆகியவற்றை முழுமையாக புறக்கணிக்கும் வகையில் இந்த அனுமதி அமைந்துள்ளது. தமிழகத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், சுற்றுச்சூழல் சமநிலை, தமிழகத்தின் சட்டபூர்வமான பங்கு ஆகிய அனைத்தும் ஆபத்துக்கு உள்ளாகும் நிலையில், மேகதாது அணை திட்டம் எந்த வகையிலும் அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடாது என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெளிவாக வலியுறுத்துகிறது.
தமிழகத்தின் நீர் பங்கீட்டினை குறைக்கும் எந்த முடிவையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இந்த முடிவு தமிழக விவசாயிகளின் நம்பிக்கையை மட்டுமே பாதிக்காமல், இரு மாநிலங்களுக்கும் இடையிலான நதிநீர் பகிர்வு அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியது.
இச்சூழ்நிலையில், தமிழகத்தின் உரிமைகளை காக்கும் வகையில் தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம் வழிகாட்டியுள்ள குறிக்கோள்கள் மற்றும் முந்தைய தீர்ப்புகள் அனைத்தையும் முன்வைத்து, மேகதாது அணை திட்டத்தை தடுக்க அரசோடு இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் சட்டபோராட்டம் நடத்த என்றும் உறுதுணையாக நிற்கும்.
தமிழகத்தின் நீருரிமை, விவசாய உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை எந்த விலையையும் கொடுத்து காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள நிலையில், இவ்விஷயத்தில் தமிழகத்தின் மக்கள் உணர்வுகளை மதித்து மத்திய அரசும் உரிய தலையீடு செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications