சிங்கப்பூருக்கு ஸ்டாலின் போனார்.. 10,882 கோடி வந்ததாம்! இனி அமெரிக்கா பயணம்
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழில் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் இன்று பதிலுரை ஆற்றினார் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. அப்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். டிஆர்பி ராஜா பேசுகையில், "முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கு பயணித்ததன் விளைவாக 10,882 கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.
சென்னையில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளில், 60% முதலீடுகள் பணிகளாக மாறியுள்ளன. இது தொடர்பாக 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக அவர்கள் கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறின.
ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால் தொழில்துறை மூலமாக மட்டுமே 31 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம். ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவு தீவிர ஆய்வுக்கு பிறகே எடுக்கப்பட்டது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும்" எனத் தெரிவித்துள்ளார் டிஆர்பி ராஜா.
மேலும், திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும் என்று தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ.2,100 கோடி கடன் வழங்கப்படும் என்றும் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications