டாக்டர்கள் காட்டிய பச்சைக்கொடி! மீண்டும் உற்சாகமாக சுற்றுப்பயணம் புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: முதுகு வலி காரணமாக வெளியூர் சுற்றுப்பயணங்களை தவிர்த்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின், மருத்துவர்கள் காட்டிய பச்சைக்கொடியால் மீண்டும் உற்சாகமாக டூர் புறப்பட தயாராகிவிட்டார்.
திருச்சி, பெரம்பலூர், அரியலூர், என முதற்கட்டமாக 2 நாட்களில் 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்தபடியாக நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு விசிட் அடிக்கவுள்ளார்.
முறையான உடற்பயிற்சி, ஓய்வு, மற்றும் மருந்துகள் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு முதுகு வலி ஓரளவு குறைந்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று நள்ளிரவு சென்னையில் பிரபாகரன் பிறந்தநாள் விழா .. மாட்டுக்கறி விருந்துடன்- அடுத்த பஞ்சாயத்து!
பயணப் பிரியர்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களையும், கட்சிக்காரர்களையும் சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர். பல நூறு கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய நேர்ந்தாலும் அதற்கெல்லாம் சளைக்காதவர். பயணத்தால் களைப்பு ஏற்பட்டாலும் தன்னை வரவேற்க வந்திருக்கும் கட்சிக்காரர்களை பார்த்தவுடன் அப்படியொரு உற்சாகம் கொள்வார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முதுகு வலி காரணமாக வெளியூர் சுற்றுப்பயணங்களை முற்றிலும் தவிர்த்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது மீண்டும் டூர் புரோகிராம்களை திட்டமிட்டுள்ளார்.
3 மாவட்டங்கள்
வரும் திங்கள்கிழமை காலை சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர் அங்குள்ள காட்டூருக்கு சென்று சக்கரங்களில் அறிவியல் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்திற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் கோத்தாரி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிறகு பெரம்பலூர் அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மாளிகைமேட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அன்றிரவே அரியலூர் செல்கிறார்.
அடுத்தது தென்காசி
திங்கள்கிழமை இரவு அரியலூர் அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், செவ்வாய்கிழமை காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்த கையோடு திருச்சி விமானம் நிலையம் சென்றடைந்து அங்கிருந்து விமானம் மூலம் பிற்பகல் சென்னை சென்றடையும் அவர், அன்று மாலையே அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். இதனிடையே அடுத்ததாக நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் செல்லவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கட்சியினர் உற்சாகம்
முதலமைச்சர் மீண்டும் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் புறப்பட்டுள்ளதால் திமுகவினர் உற்சாகம் பொங்க அவரை வரவேற்க தயாராக உள்ளனர். இதேபோல் வெளியூர் சுற்றுப்பயணங்கள் மூலம் மக்களையும், கட்சியினரையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதால் முதலமைச்சர் ஸ்டாலினும் உற்சாகத்துடன் காணப்படுகிறார்.