இரவோடு இரவாக சந்தித்தும்.. விஜய் கோரிக்கையை ஏற்க மறுத்த எடப்பாடி பழனிச்சாமி!
சென்னை: நடிகர் விஜய், இரவு 10 மணிக்கு மேல், நேரில் சென்று கோரிக்கை விடுத்தும், அதை ஏற்கவில்லை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, திடீரென பெரிய பரபரப்பை ஏற்படுத்திய செய்தி என்றால், எடப்பாடி பழனிச்சாமி, விஜயை சந்தித்துப் பேசியதுதான்.
இரவு 10 மணிக்கு மேல், எடப்பாடி பழனிச்சாமியை விஜய் சந்தித்துப் பேசியுள்ளார். அந்த தகவலை விஜய் தரப்பு ரகசியமாக வைத்திருந்த நிலையில் மறுநாள் காலையில் தகவல் வெளியாகியது.

மாஸ்டர் ரிலீஸ்
பொங்கலையொட்டி, விஜய் நடிப்பில் வெளியாகும் 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஓடிடி தளத்தை தவிர்த்துவிட்டு தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதே விஜய் விருப்பமாக உள்ளது. ஆனால் தியேட்டரில் கூட்டம் வராவிட்டால், போட்ட பணத்தை மீட்டு எடுப்பது கஷ்டம் என்ற தயக்கம் தயாரிப்பு தரப்பில் உள்ளது. இந்த நிலையில்தான் முதல்வரை சந்தித்தார் விஜய்.

விஜய் கோரிக்கை
திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளில் இருந்து மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து பார்க்க அனுமதி தரப்படுகிறது. அதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில்.. 80% அளவுக்காவது இடம் கொடுங்கள், அப்போது தான் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்று விஜய் கோரிக்கையாகவே இறங்கி வந்து கூறியுள்ளார்.

விஜய் கோரிக்கை புறக்கணிப்பு
பரிசீலிப்பதாக பதில் சொல்லி அனுப்பி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் விஜய கோரிக்கையை முதல்வர் ஏற்கவில்லை என்பது முதல்வர் இன்று வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தார். குறிப்பாக, அதிகபட்சம் 50 சதவீதத்துடன் இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சாரம், கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த ஜனவரி 1ம் தேதி முதல் தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில், காவல்துறை ஆணையர் அவர்களிடம் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம், என்று, முதல்வர் தெரிவித்துள்ளார்.

மக்கள்தான் முக்கியம்
நடிகர் விஜய் விடுத்த கோரிக்கையை விடவும், மக்களின் உயிர்தான் முக்கியம் என்ற முடிவை எடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. மக்களின் பாதுகாப்பில் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்பதில் முதல்வர் உறுதியாக இருந்துள்ளார் என்பது இந்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது. முதல்வரை சந்தித்து இந்த விதிமுறைகள் தளர்வுகளை கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தப் போவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் மீடியாக்களிடம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications