நல்ல நேரத்தில் பதவியேற்று ராகுகாலம் முடிந்து முதல் கையெழுத்து போட்ட மு.க. ஸ்டாலின்
வெள்ளிகிழமை காலை 9 மணிக்கு நல்ல நேரம் பார்த்து முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட மு.க ஸ்டாலின். ராகு காலம் முடிந்து நல்ல நேரம் பார்த்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தனது பணிகளைத் தொடங்கியுள்ளார்.
சென்னை: ராகுகாலம் முடிந்து நல்ல நேரத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தனது பணிகளைத் தொடங்கியுள்ளார் மு.க ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தை போட்டிருக்கிறார். கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட முக்கிய 5 அறிவிப்பு ஆணைகளில் கையெழுத்து போட்டிருக்கிறார் மு.க ஸ்டாலின்.
இன்று காலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையாக விழாவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று உச்சரித்து முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் மு.க ஸ்டாலின். காலை 9 மணி முதல் 10.15 மணிக்குள் நல்ல நேரத்தில் முதல்வர் ஸ்டாலினுடன், அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து கோபாலபுரம் வீட்டிற்கு சென்று கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்திய மு.க ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாவின் ஆசியைப் பெற்றுக்கொண்டார். மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். பெரியார் திடலுக்கு சென்று ஈவேரா பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
ஏழைகள் வயிற்றில் பால் வார்த்த கையெழுத்து - 'ஆவின்' பால் விலை.. லிட்டருக்கு '3' ரூபாய் குறைப்பு
நல்ல நேரத்தில் பதவியேற்பு
வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி ராகு காலம், குரு, செவ்வாய் ஹோரை காலம் என்பதால் இந்த நேரத்தில் புதிய பணிகளை தொடங்காமல் சரியாக 12.30 மணிக்கு தலைமைச்செயலகம் வந்தார் மு.க ஸ்டாலின்.
முதல் கையெழுத்து
திமுகவின் சின்னம் உதயசூரியன். முதல்வர் மு.க ஸ்டாலின் சூரிய ஹோரையில் தனது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து ஐந்து பைல்களில் கையெழுத்து போட்டார். கொரோனா கால நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் அறிவிப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.
ரூ.3 ரூபாய் குறைப்பு
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் அறிவிப்பில் கையெழுத்து போட்டிருக்கிறார். மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்படும்.
இலவச பயணம்
அனைத்து மகளிரும், உயர்கல்வி பயிலும் மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளை முதல் பயண அட்டை எதுவும் இன்றி இலவசமாகப் பயணிக்கலாம். போக்குவரத்துக்கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவான ரூ. 1200 கோடியை அரசு மானியமாக வழங்கும்.
100 நாட்களில் தீர்வு
பொதுமக்களின் புகார்களுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் இதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறையை உருவாக்கி அதற்கு ஐஏஎஸ் நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.
அரசே செலுத்தும்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் சிகிச்சை கட்டணத்தை அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செலுத்தும். முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து வகையான கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தையும் அரசே இனி செலுத்தும்.