சர்ப்ரைஸ் தர்றாரா ஸ்டாலின்.. இன்று 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் களஆய்வு..எதிர்பார்ப்பில் டெல்டா
சென்னை: 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின், நாகையில் இன்று ஆய்வு செய்கிறார். கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் இந்த ஆய்வினை மேற்கொள்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்து, ஆட்சியர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதிகாரிகளைச் சந்தித்து பேசியிருந்தார்.

அந்தவகையில், தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொண்டு வருகிறார்.
விரிவாக்கம்: நேற்றைய தினம், தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த திட்டத்திற்குரிய தொகையை, நிதி ஒதுக்கீடு என்று சொல்வதைவிட, நிதி முதலீடு என்று குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் அறிவை மேம்படுத்த, உள்ளத்தை மேம்படுத்த அரசு நிதி முதலீடு செய்திருக்கிறது. அந்த முதலீடு நிச்சயமாக நாட்டுக்கு லாபம் தரும் வகையிலான ஆற்றலாக, திறமையாக வெளிப்படும். அதுதான் உண்மை என்று பூரித்து போய் சொல்லியிருந்தார்.
கலெக்டர்கள்: இந்நிலையில், 2-வது நாளான இன்றைய தினம் காலை, கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார். பிறகு, நாகையில் இருந்து திருவாரூருக்கு சென்று இரவில் அங்கு தங்குகிறார். நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்..
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவுள்ள சூழலில், இந்த 4 மாவட்டங்களில் ஆய்வு என்பதால், அரசு சார்பில் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறார்கள்.

நாளை 27-ந்தேதி நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார். பிறகு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 27-ந்தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில், ஆகஸ்ட் 24 மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.. அதேபோல, முதல்வரின் வருகையை முன்னிட்டு நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications