அய்யா எப்படி இருக்கீங்க.. மருத்துவமனைக்கு ஓடிய மு.க.ஸ்டாலின்! கையை பிடித்ததும் நெகிழ்ந்த ராமதாஸ்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தமிழக அரசியல்வாதிகளில் மூத்தவருமான ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனைக்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஆன மு.க.ஸ்டாலின், ராமதாஸின் உடல் நலம் குறித்து விசாரித்ததோடு மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (அக். 5) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இதை அறிந்த அன்புமணி இன்று (அக். 6) காலை மருத்துவமனைக்குச் சென்று தந்தையை சந்திக்க முயன்றார். ஆனால் அவரை சந்திக்கவில்லை என சொல்லப்படுகிறது. "அவரது உடல்நிலை சீராக உள்ளது, இன்னும் சில மணி நேரங்களில் ஐசியூவிலிருந்து வெளியே வருவார்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முக ஸ்டாலின்
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸை, முதலமைச்சர் சந்தித்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் பெருமதிப்பிற்குரிய மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களைச் சந்தித்து, அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்.அவர் விரைந்து நலம்பெற்று, தமது வழக்கமான பணிகளைத் தொடர்ந்திட விழைகிறேன்."இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராமதாஸ்
பட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) கடந்த சில மாதங்களாகவே நிலவி வந்த தந்தை-மகன் மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸும் அவரது மகனும், தற்போதைய தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தற்போது கட்சியின் உட்கட்டமைப்பையே உலுக்கும் அளவிற்கு சென்றுவிட்டன. இதன் விளைவாக பாமக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியும் குழப்பமும் நிலவுகிறது.
அன்புமணி ராமதாஸ்
இந்த மோதலின் தொடக்கம் கட்சியின் தலைமை அதிகாரம் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் ஏற்பட்ட முரண்பாட்டிலிருந்தே தொடங்கியது. ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை தனது மகன் அன்புமணிக்கு எதிராக முன்வைத்தார். குறிப்பாக, தனது அலுவலகத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாகவும், அதை அன்புமணிதான் செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், பாமக அலுவலகம் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில்தான் உள்ளது, வேறு எங்கும் அதிகாரப்பூர்வ அலுவலகம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.
பாமக உட்கட்சி பிரச்சனை
மறுபுறம், அன்புமணி சென்னையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து கட்சியின் எதிர்கால கட்டமைப்பை குறித்து ஆலோசித்து வந்தார். இதே நேரத்தில் ராமதாஸ், தைலாபுரத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து அன்புமணிக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விவாதித்தார். அதன் அடிப்படையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ராமதாஸ் தரப்பில் அனுப்பப்பட்ட இரண்டு நோட்டீசுகளுக்கும் அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, ராமதாஸ் தனது மகனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட நீக்கும் அதிரடி முடிவை எடுத்தார்.
பாமகவில் குழப்பம்
இதற்கிடையில், அன்புமணி "உரிமை மீட்க... தலைமுறை காக்க..." என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதற்கு ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்திய தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்துள்ளதாக அவரது தரப்பு வாதிடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications