வாழ்த்திய பிரேமலதா.. தேமுதிவை கூட்டணிக்கு அழைத்த காங்கிரஸ்.. திட்டமிட்டு காய் நகர்த்தும் திமுக?
சென்னை: தேமுதிக இந்தியா கூட்டணிக்கு வந்தால், நிச்சயமாக வரவேற்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஏற்கனவே திமுக - தேமுதிக இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் சில மாதங்களில் கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இயங்கி வருகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடும் போது திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி கூடுதலாக இணைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணி கூடுதல் வலிமையுடன் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

பிரேமலதா அதிருப்தி
இதனிடையே அதிமுக - பாஜக கூட்டணி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இதுவரை அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிமுக மீது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அதிருப்தியில் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
கருணாநிதிக்கு வாழ்த்து
இந்த பக்கம் மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்-க்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிரேமலதா நன்றி கூறி இருந்தார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு பிரேமலதா, இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் இன்று.
பிரேமலதா பதிவு
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை என்று பதிவிட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை பேட்டி
இதனால் திமுக - தேமுதிக இடையில் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேமுகதிவை கூட்டணிக்கு வரவேற்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வப்பெருந்தகை, கண்டிப்பாக இந்தியா கூட்டணியின் தலைநாட்டின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார்.
சூசகமாக சொன்ன காங்கிரஸ்
எனது கருத்து என்னவென்றால், நிச்சயமாக தேமுதிகவை கூட்டணிக்கு வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரே தேமுதிகவை கூட்டணிக்கு வரவேற்றிருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுகவின் சிக்னல் இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பேசி இருக்க வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.
திமுக - தேமுதிக கூட்டணி?
அதேபோல் ஜனவரி மாதத்தில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் தான் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி இருந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் தேமுதிக இதுவரை திமுக உடன் கூட்டணி அமைத்ததே கிடையாது. இதனால் திமுக கூட்டணிக்கு வரும் முடிவை தேமுதிக எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications