திருத்தணி ரயிலில் ஒடிஸா இளைஞர் மீது தாக்குதல்! வீடியோவை நீக்க "எக்ஸ்" தளத்திற்கு தமிழக போலீஸ் கடிதம்
சென்னை: ரயில் பயணங்களின்போது பட்டாக்கத்தியைக் கொண்டு தாக்குவது போன்ற வன்முறை வீடியோக்கள் 'எக்ஸ்' தளத்தில் (முன்னர் ட்விட்டர்) பரப்பப்படுவது குறித்து, தமிழகக் காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் 'எக்ஸ்' நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இளைய தலைமுறையினரை வன்முறைக்குத் தூண்டும் அத்தகைய இணையதள முகவரிகளை உடனடியாக முடக்க அவர் கோரியுள்ளார்.

இத்தகைய வீடியோக்கள் சமூக அமைதி, பொது ஒழுங்கு மற்றும் நல்லிணக்கத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என மிட்டல் தனது கடிதத்தில் எச்சரித்துள்ளார்.
திருத்தணியில் ரயில் பயணத்தின் போது ஒடிஸா இளைஞரை 4 சிறார்கள் தாக்குதல் நடத்திய ஒரு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின்படி, இந்த இணையதள முகவரிகள் சட்டவிரோதச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட 'எக்ஸ்' கணக்குகளையும் அவற்றின் முகவரிகளையும் முடக்குமாறு டி.ஜி.பி. மிட்டல் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்த விவகாரம் தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது: 'அரசின் அக்கறையின்மை மற்றும் நிர்வாகச் சீர்குலைவை அம்பலப்படுத்துவது எதிர்க்கட்சியின் அடிப்படைக் கடமையாகும். இந்தத் தோல்விகளை முன்னிலைப்படுத்துவது தி.மு.க. அரசுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தினால், அதற்கான தீர்வு 'எக்ஸ்' நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுப்பது அல்ல.
எதிர்க்கட்சிகளின் குரலை அடக்குவதற்குப் பதிலாக, முதலில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு வேலை செய்ய தி.மு.க. அரசு முயற்சிக்கலாம்' என்று அண்ணாமலை விமர்சனத்துடன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில் ஒடிஸாவை சேர்ந்த ஒரு இளைஞர் 17 வயது மதிக்கத்தக்க 4 சிறுவர்களால் பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இதை அந்த சிறுவர்கள் வீடியோ எடுத்து ரீல்ஸாக பதிவிட்டனர். இந்த வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களில் 3 சிறுவர்கள், சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் இன்னொரு சிறுவர் அவரது பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications