ஆட்டம் போடும் கொரோனா.. 4000ஐ நெருங்கும் வைரஸ் பாதிப்பு.. தேர்தலுக்கு பின் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 21,958ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதேபோல தமிழகத்திலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மரபணு மாறிய கொரோனா இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
கொரோனா பாதிப்பு
இந்நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாவது நாளாக கொரோனா பாதிப்பு 3000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,581 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 19 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,99,807ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
ஒரே நாளில் கொரோனா காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐந்து பேரும் சென்னையில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல காஞ்சிபுரத்தில் இரண்டு பேரும், கன்னியாகுமரி, திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். இதுவரை மாநிலத்தில் 12,778 பேர் காரணமாகப் பலியாகியுள்ளனர்.
Array
கடந்த 24 மணி நேரத்தில் 1,813 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 8,65,071 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 20,204இல் இருந்து ஒரே நாளில் 21,958ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 7,698 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எங்கு அதிகம்
தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக 1344 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 315 பேருக்கும் செங்கல்பட்டில் 297 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், தஞ்சை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாக்குப்பதிவுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னை மக்கள் கசப்பான அனுபவங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.