24 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா.. ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைவதால் நிம்மதி
சென்னை: தமிழகத்தில் 2ஆம் அலைக்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் 718 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது.
தற்போது மாநிலத்தில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு கேரளா உடனான பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை 3-வது நாளாக முடக்கிய எதிர்க்கட்சிகள்.. வெல்கிறதா சோனியாவின் வியூகம்?
தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 718 பேருக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து திரும்பிய 4 பேரும், மேற்கு வங்க்தில் இருந்து திரும்பிய 2 பேரும், ஆந்திரா, கேரளா, வங்கதேசத்தில் இருந்து திரும்பிய தலா ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 27,27,635 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாசிட்டிவ் விகிதம்
அதேபோல மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே உள்ளது. தமிழகத்தின் பாசிட்டிவ் விகிதம் தற்போது 0.7%ஆக உள்ளது. கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.7% ஆகவே உள்ளது. அதிகபட்சமாகத் திருப்பூரில் 1.4% சேலம், நாமக்கல், செங்கல்பட்டு மாவட்டங்களில் 1.3%ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் நீண்ட காலத்திற்குப் பிறகு பாசிட்டிவ் விகிதம் மீண்டும் 1%ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் என மொத்தம் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,492 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாகச் சென்னை, கோவை, சேலம் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 8,244ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 8,200ஆகக் குறைந்துள்ளது அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 751 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,82,943 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்
மாவட்ட வாரியாக பாதிப்பு
இன்றைய தினம் தலைநகர் சென்னையில் 117 பேருக்கும் கோவையில் 118 பேருக்கும் செங்கல்பட்டில் 64 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை. தமிழகத்தில் அரியலூர், தூத்துக்குடி, நெல்லை உட்பட மொத்தம் 24 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது.