பண்டிகை காலம்..தயார் நிலையில் இருங்கள்..காவல்துறையினருக்கு உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு
சென்னை: அவசரகாலப் பணிகளுக்கு ஆயுதப்படை காவலர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள், தொடர்ந்து வரவுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பு அளிப்பது அவசியம் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாநகர கமிஷனர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் எதிர்வரும் நாட்களில் முக்கிய விழாக்கள், பண்டிகைகள் மற்றும் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்களின் பிறந்த நினைவு நாட்கள், தொடர்ந்து வரவுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சாதி மற்றும் மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது.
இச்சமயங்களில் இருபிரிவினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாகிறது.
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
காவல்துறையினருக்கு பயிற்சி
மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள ஆளிநர்களுக்கும், சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை காவல் நிலை ஆணைப்படியும் (Police Standing Order) பயிற்சி கையேட்டின் படியும் (Drill Manual) கவாத்து பயிற்சி வழங்க வேண்டும். இப்பயிற்சியை ஆயுதப்படையில் உள்ள உயர் அதிகாரிகள்(காவல் ஆய்வாளர்கள் மற்றும் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர்கள்) கண்காணிக்கவும் கலந்து கொள்ளவும் அவர்களை அறிவுறுத்த வேண்டும்.
உரிய பயிற்சி தேவை
ஆயுதப்படையில் உள்ள துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலவர சம்பவங்களில் (Riot Drill) படையை வழிநடத்துவதற்கு அவ்வப்போது உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும். ஆயுதப்படையில் கேடயம் (Shield), லத்தி (lathi), ரப்பர் தோட்டாக்கள் (rubber bullets), பிளாஸ்டிக் தோட்டாக்கள் ( Plastic bullets), பம்ப் ஆக்ஷன் கன் ( Pump action gun), கேஸ் கன் (Gas gun) கேஸ் செல்கள் மற்றும் இதர ஆயுதங்கள் போதுமான அளவில் உள்ளனவா?, சரியாக வேலை செய்கின்றனவா? ஏன அவ்வப்போது தணிக்கை செய்வதுடன், எவ்வாறு கையாள வேண்டுமென கவாத்து பயிற்சகியின்போதே காவல் ஆளிநர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.
வஜ்ரா, வருண் வாகனங்கள்
கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருண் மற்றும் இதர வாகனங்களை முறையாகப் பராமரித்து தயார் நிலையில் வைப்பதற்கு அறிவுறுத்தப்பட வேண்டும். ஒலிபெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு செய்யவும் ஆளிநர்களுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
தயார் நிலை
எனவே நகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களை தயார் நிலையில் வைத்து, முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு அவர்களை உட்படுத்த அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் / மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்குறிப்பாணை பெற்றுக்கொண்டமைக்கு ஒப்புதல் அளிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.