ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாடு காணாமல் போச்சு: சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
சென்னை: ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் சட்டசபையில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ஜெயலலிதா தொடர்பான இந்த கருத்தை பதிவு செய்தார்.
ஏற்கனவே நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது பல பேட்டிகளில், ஜெயலலிதா ஆரோக்கியமாக இருந்தவரை தமிழக நிதி நிலைமையும் நன்றாகத்தான் இருந்தது, அவர் நோய்வாய்ப்பட்ட பிறகு நிதி நிலை சரிவடையத் தொடங்கியது என்று தெரிவித்திருந்தார்.

ஜெயலலிதா நிர்வாகம்
கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலங்களில் தமிழக உரிமை காக்கப்பட்டது, நிதி நிலைமை சீராக இருந்தது என்பது திமுக தரப்பின் முக்கிய தலைவர்கள் அடிக்கடி வலியுறுத்தும் விஷயமாக உள்ளது. அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், இதே தொனியில் இன்று சட்டசபையில், பேசியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழ்நாட்டை காணவில்லை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை, அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது என்று கூறினார். இதன்பிறகு அமைச்சர் கூறியவை பின் வருமாறு.

ஸ்போக்கன் இங்கிலீஷ்
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை, பள்ளி முடிந்த பிறகு 6,7,8 ஆகிய மாணவர்களுக்கு தனியாகவும், 9,10,11,12 ஆகிய மாணவர்களுக்கு தனியாகவும் நடத்த முடிவு செய்து அது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம். தமிழ் கல்வியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேச சிரமப்படுவதை கருத்தில் கொண்டு இந்த திட்டம் உள்ளது.

குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது
நாட்டுப்புற கலைஞர்களின் உதவியுடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கரகாட்டம், கும்மி, சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
18 வயதிற்கு உட்பட்ட குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும். 3 சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து ரூ.25000 ரொக்கம் வழங்கப்படும்.

சிறப்பு விருதுகள்
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்விற்கு பொதுவான கொள்கை வகுக்கப்பட்டு, வெளிப்படையாக நடத்தப்படும். பள்ளிக்கு வந்து படிக்க முடியாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வீட்டிற்கே சென்று கல்வி மற்றும் இயன்முறை சிகிச்சை அளிக்க புது திட்டம் உருவாக்கப்படும். பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கல்வித்தரம், பெற்றோருக்கான விழிப்புணர்வு ஆகிய தளங்களில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்.

தமிழ் நூல்கள் மொழி பெயர்ப்பு
திசைதோறும் திராவிடம் என்ற பெயரில் சிறந்த தமிழ் நூல்கள் மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்படும். உயர்கல்வி, வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications