‛‛கோபமான மின்வாரிய ஊழியர்கள்’’.. தமிழகம் முழுவதும் திடீர் போராட்டம்! மொத்தமாக முடங்கிய பணிகள்
சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திட்டமிட்டப்படி இன்று மாநிலம் முழுவதும் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மின்வாரியத்தில் காலியாக உள்ள 55,000 பணியிடங்களை நிரப்புதல் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழகம் முழுவதும் இன்று மின்வாரிய பணிகள் முடங்கி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று மின்சாரத்துறை. இந்நிலையில் தான் மின்வாரியத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ‛லைன்மேன்' பணியாளர்கள் உள்ளூர்காரர்களை பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் முக்கிய அறிவிப்பானது. அதாவது தமிழ்நாடு மின்வாரியத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும்போது உரிய நேரத்தில் ஓய்வுக்கால பணபலன்களை வழங்க வேண்டும்.
பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியான ரூ.5 லட்சத்தை மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 9 ம் தேதி மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர் நல ஆணையத்தில் நேற்று பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு என்பது எட்டப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை என்பது தோல்வியடைந்தது. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று மின்வாரிய ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்களின் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
மின்வாரிய தலைமை அலுவலகங்களின் முன்பு மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தால் தமிழகத்தில் இன்று மின்வாரிய பணிகள் முடங்கி உள்ளது. மேலும் சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகங்களின் முன்பு அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மின்வாரிய அலுவலகங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.











Click it and Unblock the Notifications