"ஆறே நொடியில் எல்லாம் மாறும்" அதிமுக-பாஜக கூட்டணியால் அமமுகவுக்கு சிக்கல்? டிடிவி தினகரன் சொன்ன பதில்
சென்னை: தமிழகத்தில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்றாலும் கூட இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. குறிப்பாக திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே கூட்டணி சார்ந்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே கூட்டணி தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
இன்றைய தினம் தனியார் திருமண மண்டபத்தில் அமமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமமுக மாவட்டச் செயலாளர் தேர்வாகி பாண்டி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்றார். கட்சி செயல்பாடுகள் குறித்து அவர் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

டிடிவி தினகரன்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2024ல் லோக்சபா தேர்தலிலேயே நான் பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டோன். இப்போது என்டிஏ கூட்டணியில் சில புதிய கட்சிகள் இணைந்துள்ளன. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரே அணியில் திரண்டு நின்றால் தான் திமுகவைத் தோற்கடிக்க முடியும். 2021ல் அமித் ஷா மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற முடியாததால் தான் திமுக வென்றது.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் இணைய வேண்டும்.. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரே அணியில் இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே அமித் ஷாவின் முயற்சி! அந்த நல்ல முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். எங்கள் என்டிஏ கூட்டணி சார்பில் அவரது கருத்துகளை வரவேற்கிறோம். இதில் முரண்பாடு என்கிற கருத்திற்கே வேலையில்லை. 2024ல் தோல்வி அடைந்த கூட்டணியை அமித் ஷா வலுப்படுத்தி இருக்கிறார். இன்னும் கூட்டணியை வலுப்படுத்தப் புதிய கட்சிகளைக் கொண்டு வரும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
திமுகவை வீழ்த்த வேண்டும்
திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே ஒரே நோக்கம். அமித் ஷாவின் கருத்து தான் எனது கருத்து! இதன் காரணமாகவே ஒரே கூட்டணியில் இணைந்துள்ளோம். யாரோ சிலர் கூட்டணியில் அமமுக இருக்கிறார்களா என்றே தெரியவில்லை என்கிறார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது" என்றார்.
பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு, "பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அவரை சந்திக்க நான் இதுவரை அப்பாயிண்ட்மெண்ட் கேட்கவில்லை. அதேநேரம் அவர் வந்து சென்ற பிறகு அரசியல் மாற்றம் நடக்குமா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்" என்றார். சசிகலா குறித்த கேள்விக்குச் சித்தி என்கிற முறையில் சசிகலாவிற்கும் தனக்கும் நல்ல உறவு இருப்பதாக மட்டும் குறிப்பிட்டார்.
6 நொடியில் மாறும்
தொடர்ந்து கூட்டணி குறித்த கேள்விக்கு அவர், "அரசியலில் 6 நொடியில் கூட மாற்றம் வரும். தேர்தலுக்கு இன்னும் பல மாதம் இருக்கிறது. எனவே, இப்போது எதுவும் சொல்ல முடியாது. 2026 ஜனவரி இறுதியில்தான் திமுக, அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சி உள்ளது என்பது தெரிய வரும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் உள்ளது.
திமுக மீது பாய்ச்சல்
தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாகப் பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை எனச் சொல்லிவிட்டு சிலருக்கு மட்டும் இப்போது தருகிறார்கள். திமுகவிற்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் உங்களுடன் ஸ்டாலின் எனச் சொல்லி ஏதேதோ செய்து வருகிறார்கள். திமுகவை அகற்றவேண்டும் என்கிற ஒரே நோக்கம் கொண்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications