பிரசாரம் ஓய்ந்தது.. கடைசி நாளில் தமிழக அரசியல் தலைவர்களின் இறுதி பரப்புரைகள் எங்கெங்கு நடந்தது?
சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் யார் யார் எங்கெங்கு பிரச்சாரம் செய்தனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 39 நாட்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் தேர்தல் 23 ஆம் தேதி என்பதால் 21 ஆம் தேதியான இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

6 மணிக்கு மேல் எந்த அரசியல் கட்சிக்கும், அரசியல் சின்னத்திற்கும், எந்த வகையிலும் வாக்கு கேட்க கூடாது. பிரச்சாரம், வாக்கு கேட்பது என்றில்லை, சமூகவலைதளங்களிலும் யாரும் வாக்கு கேட்கக் கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதனால் மாலை 6 மணிக்குள் அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தை முடித்தனர்.இன்றைய தினம் யார் யார் எங்கெங்கு பிரச்சாரம் செய்தனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டாலின்
காலை 7 மணி சோழிங்கநல்லூர், காலை 10 மணிக்கு வேளச்சேரியில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு கொளத்தூரில், சொந்த தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.
எடப்பாடி பழனிசாமி
அது போல் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி காலை 10 மணிக்கு சேலத்தில் பிரச்சாரத்தை முடித்த நிலையில் மதியம் 2 மணிக்கு தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
விஜய்
தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு விஜய் செல்லாத நிலையில் கடைசி நாளான இன்று காலை 10 மணிக்கு சோழிங்கநல்லூரில் பிரச்சாரம் செய்தார். இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு சைதாப்பேட்டையில் விஜய் பிரச்சாரம் செய்தார்.
அன்புமணி ராமதாஸ்
சேலத்தில் காலை 9 மணிக்கு பிரச்சாரத்தை முடித்த அன்புமணி மதியம் 2 மணிக்கு தருமபுரியில் சவுமியா அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
சீமான்
காலை 9 மணிக்கு காரைக்குடியிலும், 10 மணிக்கு ஐந்து விளக்கு பகுதியிலும், காலை 11 மணிக்கு பழைய பேருந்து நிலையம் பகுதியிலும் பிரச்சாரம் செய்த சீமான், பிற்பகல் 3 மணிக்கு பாண்டியன் திரையரங்கம் அருகே பிரச்சாரம் செய்தார்.












Click it and Unblock the Notifications