"வாழ்த்துகள் விஜய்.!" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து! தவெக வெற்றிக்கு என்ன சொன்னார் தெரியுமா!
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாக்குகளைத் தெரிவித்து வரும் சூழலில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் கட்சி மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் விஜய் கட்சி 108 இடங்களில் வென்றது. விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இரண்டிலும் அவர் வெற்றி பெற்றார்.

தமிழ்நாடு தேர்தல்
ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த திமுக இந்த முறை 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. அதேநேரம் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் தேர்தலை எதிர்கொண்ட அதிமுக இந்த முறை வெறும் 47 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட அதிமுக இழந்தது. மேலும், இந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மாஜி அமைச்சர்கள் எனப் பலரும் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஜினி வாழ்த்து
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள். இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
என்ன நடந்தது!
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் சமயத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ரஜினியை திமுக மிரட்டியது என்பது போல ஆதவ் அர்ஜுனா சொன்னதாக ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தனர். இருப்பினும், தான் அதுபோல எதுவும் சொல்லவில்லை என்றும் இதற்காக மன்னிப்பும் கேட்டுக்கொள்வதாக ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.
அப்போது காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என ரஜினி அறிக்கை வெளியிட்டது பேசுபொருள் ஆனது. இது தொடர்பாக ரஜினி அப்போது வெளியிட்ட அறிக்கையில், "தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களுக்கு, என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன்
மேலும், ஜனநாயகன் திரைப்படம் தியேட்டர் ரிலிஸுக்கு முன்பாகவே இணையத்தில் வெளியானதையும் ரஜினி கண்டித்து இருந்தார். அது தொடர்பாக அவர், "ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications